அதிக எதிர்பார்ப்புகளுடன் உதயமாகியுள்ளது புதிய ஆண்டு – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!
Sunday, January 1st, 2017சுபீட்சம், சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் பற்றிய புதிய எதிர்பார்ப்புகளுடன் 2017 ஆம் ஆண்டு மலர்ந்திருக்கின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மலர்ந்திருக்கும் புதிய ஆண்டினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் அந்த அறிக்கையில், பேண் தகு யுகத்தின் ஊடாக வறுமையை நம் நாட்டில் இருந்து அகற்றும் உணர்வுபூர்வமான உறுதிப்பாட்டுடன் 22 மில்லியன் இலங்கையர்களும் ஒன்றிணைந்து இருக்கின்றனர்.
நிச்சயம் இச்சவாலை நாம் வெற்றி கொள்ள வேண்டும். அதனை சாதிப்பது எமக்கு கடினமான இலக்கு அல்ல. சவால்களைக் கண்டு சளைக்காத தன்னம்பிக்கையும் மன வலிமையும் மிக்க மனிதர்களாலேயே மானிட வளர்ச்சியின் பரிணாமம் சாத்தியமாகியிருக்கின்றது.
பொது நன்மையைக் கருதி காலத்தை உகந்த வகையில் முகாமைத்துவம் செய்து சிறந்த முறையில் நிறைவேற்றுவதன் மூலமே எம்மால் உயர்ந்த இலக்கை அடைய முடியும். எதிர்காலத்தில் நாம் எதிர் கொள்ள நேரிடும் இயற்கையின் எதிர்மறையான நிலைமைகளைத் தீர்க்க தரிசனத்துடன் புரிந்து கொள்ள வேண்டும்.
இயற்கை சூழலை நாம் வெகுவாக நேசிக்க வேண்டும் என்பதையே காலநிலை எமக்கு உணர்த்துகின்றது. அதே வேளை அனேகமான முடிவுகளை மேற்கொள்வதற்கான ஆற்றல் மிகுந்த பலசாலி இயற்கையே என்பதை நாம் ஒரு போதும் மறந்திடலாகாது.
மேலும், கைத்தொழில் மற்றும் தொழில் நுட்பத்துறைகளில் உலகம் எந்த அளவு வெற்றிகளைப் பெற்றுக் கொண்ட போதிலும் அபிவிருத்தி குறித்த எதிர்பார்ப்புகளை வெற்றி கொள்வதில் இயற்கையின் ஆசீர்வாதம் மிக முக்கிய நிபந்தனையாக அமைகின்றது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|