அதிகாரப் பகிர்வால் நாடு பிளவுபடும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது – தங்களை, தாங்களே ஆளும் மனநிலை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டும் – அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்து!

Thursday, March 7th, 2024

அதிகார பகிர்வு நாட்டை பிளவுபடுத்தும் என்ற கூற்று முற்றிலும் தவறானது. தங்களைத் தாங்களே ஆள்கிறோம் என்ற மனநிலை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டுமென்றால் அதிகார பகிர்வு அவசியமானது  என, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பிணைப் பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் சட்டமூலம், நம்பிக்கைப்பொறுப்பு பற்றுச்சீட்டுக்கள் (திருத்தச்) சட்டமூலம், ஈட்டுச்சட்டம் (திருத்தச்) சட்டமூலம், நிதி குத்தகைக்குவிடுதல் (திருத்தச்) சட்டமூலம் உள்ளிட்ட சட்டம் மூலங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,

நம்மத்தியில் வேறுபாடுகள் காணப்பட்டாலும் தமிழ்க் கட்சி தலைவர்களை வாழ்த்த வேண்டும். கடந்த வரவு செலவுத்திட்டத்தின் போது அவர்கள் அனைவரும் நாங்கள் தனி நாடு கோரவில்லை, ஒரே நாட்டுக்குள் அதிகார பகிர்வையே கோருவதாகவே அவர்கள் தெரிவித்தனர்.     சமஷ்டி முறை வரை வேண்டும் என்று பொன்னம்பலம் கூறியதுடன் ஏனையவர்கள் தமக்கு போதுமான அதிகாரங்களை பகிர வேண்டும் என்று கூறினர்.

இவ்வாறு கூறியதில் எந்தத் தவறும் கிடையாது. அமைதியான முறையில் தமது கருத்துக்களை கூறும் சந்தர்ப்பம் இருக்க வேண்டும். அது தொடர்பில் பேச வேண்டும். அதிகார பகிர்வால் நாடு பிளவடையும் என்பது முற்றிலும் பொய்யாகும். நான், அண்மையில் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றுக்கு சென்றிருந்த போது அங்கு சிலநாடுகளில் ஆய்வு செய்தேன்.

சுவிற்சர்லாந்தில் சிறப்பாக நிர்வாகம் செய்கின்றனர். அதேபோன்று பெல்ஜியம் போன்ற இடங்களுக்கு சென்றிருந்தேன். சிறிய நாடுகளில் அதிகார பகிர்வு முடியாது என்றே இங்கே நாம் கூறுகிறோம். ஆனால், பெல்ஜியம் எமது நாட்டை விட சிறிய நாடு. அங்கு 10 மாகாணங்கள் உள்ளன. அவற்றை இணைத்து பலமான சமஷ்டி அரசு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அமைதியாக வாழ்கின்றனர்.

நாம் ஒவ்வொருவர் மீதும் வைராக்கியம், நம்பிக்கையின்மையை ஏற்படுத்திக்கொண்டிருந்தால் எம்மால் முன்னோக்கி செல்ல முடியாது.

கட்சி பேதமின்றி அதிகார பகிர்வு தொடர்பில் தமது நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் அனைவரும் கூற வேண்டும். அதிகார பகிர்வு நாட்டை பிளவு படுத்தும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அப்படி நடக்காது. கொல்வின் ஆர்.டி சில்வா 1956 இல் சிங்கள மொழியை மட்டும் அரசகரும மொழியாக்கும் போது 2 மொழிகள் ஒருநாடு என்றும், ஒரு மொழி இரண்டு நாடு என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் 30 வருட யுத்தத்தின் பின்னரே இரு மொழிகள் அரச கரும மொழியாக்கப்பட்டுள்ளது. 1956 இல் செய்திருந்தால் 30 வருட யுத்தத்தை தடுத்திருக்கலாம். நாங்கள் சந்தர்ப்பவாத அரசியலில் இருந்து விடுபட வேண்டும். எதிர்கால சந்ததியினர் தொடர்பில் பார்க்க வேண்டும்.

இலங்கையிலிருந்து பல வருடங்களுக்கு முன்னர்  வெளியேறி, பல நாடுகளில் வசிக்கும் புலம்பெயர்ந்தோரில் பிரிவினைவாத நிலைப்பாட்டில் இருப்பவர்களும் இருக்கின்றனர். அவர்கள் இப்போதும் ஈழம் தொடர்பில் கதைக்கின்றனர். இவர்களால் இலங்கைக்குள் பிரிவினைகள் ஏற்படலாம். இதனால் அவர்களை மறந்துவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: