அடுத்த மாதம்முதல் எயார் இந்தியா விமான சேவைகள் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு – சுற்றுலா அதிகார சபை தலைவர் தெரிவிப்பு!

Monday, August 29th, 2022

எயார் இந்தியா விமான சேவை அடுத்த மாதம்முதல் யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்துக்கான விமான சேவைகளை ஆரம்பிக்க உள்ளது.

எயார் இந்தியா விமான சேவை நிறுவனம் பலாலி சர்வதேச விமான நிலையத்துக்கு வாரத்திற்கு இரண்டு சேவைகளை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க எண்ணியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ கூறியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். எயார் இந்தியா விமான சேவையின் விமானத்தில் 75 முதல் 90 ஆசனங்கள் வரை இருக்கும்.

இந்திய சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் இலங்கைக்கு அழைத்து வருவது இதன் நோக்கம் எனவும் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்துக்கான விமான சேவைகளை ஆரம்பிக்க இலங்கை அதிகாரிகள் உத்தேசித்திருந்தனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17 ஆம் திகதி சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து வந்த எயார்லைன்ஸ் எயார் விமானம் பலாலி விமான நிலையத்தில் முதலில் தரையிறங்கியது. இதனையடுத்து சர்வதேச வர்த்தக விமான சேவைகளுக்கான விமான நிலையமாக பலாலி விமான நிலையம் திறக்கப்பட்டடை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: