அக்குபஞ்சர் சிகிச்சை – சிகிச்சை பெறச்சென்ற நபர் ஒரவர் கிருமித் தொற்றுக்குள்ளாகி யாழ்ப்பாணத்தில் உயிரிழப்பு!

Tuesday, March 26th, 2024

முகநூலில் பதிவிடப்பட்ட அக்குபஞ்சர் சிகிச்சை தொடர்பான பதிவை நம்பி சென்ற நபரொருவர் கிருமித் தொற்றுக்குள்ளாகி யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலி வளலாய் கிழக்கைச் சேர்ந்த மாணிக்கம் சற்குணராஜா என்ற 64 வயதானவரே நேற்று உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உயிரிழந்த நபர் முகநூல் விளம்பரத்தை நம்பி யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் அக்குபஞ்சர் வைத்தியர் எனக் கூறப்படுவரால் நடத்தப்படும் சிகிச்சை நிலையத்தில் தனது இரண்டு முழங்காலிலும் ஊசியால் குத்தும் வகையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து இரு கால்களிலும் வீக்கம், நோ ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்கு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உடல்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் முழங்காலில் ஏற்றப்பட்ட ஊசியால் கிருமித் தொற்று ஏற்பட்டு உடல் முழுவதும் பரவலடைந்து உயிரிழப்பு சம்பவித்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

இலங்கையில் அக்குபஞ்சர் சிகிச்சை முறைக்கு எவ்வித பதிவும் இல்லை என்பதுடன் இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்தவர்கள் முகநூலிலோ வேறு எந்த முறையிலுமோ விளம்பரம் செய்ய முடியாதென்பது அடிப்படை விதியாகும்.

யாழ்ப்பாணத்தில் போலி மருத்துவர்கள் விளம்பரம் செய்வதன் மூலம் தவறான மருத்துவ சிகிச்சைகளில் ஈடுபடுகின்றனர். இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டிய வடக்கு மாகாண சுகாதாரதுறையோ பொலிஸாரோ நடவடிக்கை எடுப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

000

Related posts: