25000 ரூபா தண்டப்பண தீர்மானத்தில் எந்தவிதமான  மாற்றமும் இல்லை  -அரசாங்கம்!

Thursday, December 1st, 2016

போக்குவரத்து விதிகளை மீறும்  ஏழு விதமான குற்றங்களுக்கு  விதிக்கப்பட்டுள்ள  25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் எக்காரணம் கொண்டும்  மீளப்பெறப்படமாட்டாது. இதில் திருத்தம் கொண்டுவரவும் மாட்டோம்  என   அமைச்சர்  ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

உண்மையில் இவ்வாறு    ஏழு விதமான போக்குவரத்து குற்றங்களுக்கு 25 ஆயிரம் ரூபா  தண்டப்பணம் விதிக்குமாறு  பரிந்துரையை   முன்வைத்ததே  நான்தான் எனவும்   அமைச்சரவைப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில்   இன்று நடைபெற்ற  வாராந்த அமைச்சரவை முடிவுகளை  அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில்  கலந்து கொண்டு  கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் ராஜித சேனாரட்ன அங்கு மேலும்  குறிப்பிடுகையில்:

நாட்டில்  பாரியளவில் விபத்து சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றன.   அதிகளவில் மரணங்களும் இடம்பெறுகின்றன.   அதுமட்டுமன்றி இடம்பெறுகின்ற விபத்து சம்பவங்களினால் அதிகளவானோர்  விபத்து  பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர்.  அதனால் அரசாங்கம்  பாரிய செலவை  பொறுப்பேற்கவேண்டியுள்ளது.

இந்நிலையில் எவ்வகையிலாவது அதிகரித்து செல்கின்ற விபத்து சம்பவங்களை   குறைக்கவேண்டிய  தேவை  அரசாங்கத்திற்கு காணப்படுகின்றது.  அதனால்தான் இவ்வாறு முக்கியமான ஏழு குற்றச்செயல்களுக்கு   25 ஆயிரம் ரூபா தண்டப்பணத்தை விதிப்பதற்கு   நடவடிக்கை எடுத்தோம்.   இந்த 25 ரூபா தண்டப்பணத்தை  விதிக்குமாறு   கூறியதே நான்தான்.

வலதுபக்கத்தில் முந்திச்செல்லுதல்,  குடிபோதையில் வாகனத்தை செலுத்துதல் போன்றவற்றுக்கு   இந்த தண்டப்பணமும் போதுமானதல்ல.  இதனைவிட அதிகரிக்கவேண்டும். மக்களுக்கு எம்மை தெரியும். மக்கள் இதனை விரும்புகின்றனர். எனவே  இதில்  எந்த மாற்றமும் ஏற்படாது.  25000 ரூபா தண்டப்பணத்தில் எந்த குறைப்பும் செய்யப்படமாட்டாது. இது தொடர்பான சட்டமூலம் திருத்தப்பட்டு  பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.

மக்கள்  எங்களுடன்  இருக்கின்றனர்.  தற்போது  இந்த  தண்டப்பண அதிகரிப்பை  எதிர்த்து  பஸ் சேவையில் ஈடுபடுவோர்  வேலைநிறுத்தம் செய்ய வுள்ளதாக தெரியவருகிறது.  இதற்கு  மக்களே பதிலளிக்கவேண்டும்.

இந்த விடயத்தில் மக்களும்    தலையிடவேண்டும். ஏதோ ஒரு இடத்தில் அந்த இடத்திற்கு பிரவேசிக்கவேண்டியுள்ளது.  தொடர்ச்சியாக விபத்துக்களை  பார்த்துக்கொண்டிருக்க முடியாது. விபத்து சம்பவங்கள் பாரியளவில் அதிகரிக்கின்றன.   எனவே  தண்டப்பணத்தை குறைக்க முடியும் என  யாரும் எண்ணவேண்டாம். அது குறைக்கப்படமாட்டாது.

Untitled-1 copy

Related posts: