வடபகுதியை அச்சுறுத்திய குழு கைது!

Friday, November 18th, 2016

வடக்கில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் சட்ட அதிகாரத்தை பேணும் பிரிவு என்பன இணைந்து மேற்கொண்ட விசாரணை நடவடிக்கைகளையடுத்து குறித்த கைது நேற்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா, மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் ஆலோசனையில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஆர்.சிசிரகுமாரவின் வழிநடத்தலில் சட்ட அதிகாரத்தை பேணும் பிரிவு பொறுப்பதிகாரி உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.எஸ்.கே.ரட்ணாயக்கா மற்றும் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பிரசாத் ஆகியோரின் தலைமையிலான பொலிஸ் குழுவே குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளது.

வவுனியாவின் நெடுங்கேணி, வீரபுரம், யாழ் இளவாலை, கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இருந்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களுடன் தொடர்புடைய மேலும் பலரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து கைக்குண்டு 02, கத்திகள் 04, தங்க நகைகள் 28 பவுண், முகத்தை மூடி மறைத்து கட்டும் கறுப்பு துணிகள், முச்சக்கரவண்டி ஒன்று, மோட்டர் சைக்கிள் ஒன்று என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்கள் மாங்குளம், சிலாபத்துறை, ஒட்டிசுட்டான், அடம்பன், மன்னார், மாங்குளம், கனகராயன்குளம், புளியங்குளம், செட்டிகுளம், வவுனியா ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனவும், கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து இந்தக் கும்பல் செயற்பட்டு வந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த கைது தொடர்பில் சந்தேகநபர்களின் உறவினர்கள் வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததையடுத்து மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90

Related posts: