பலாலி விமானத்தளத்திற்காக சுவீககரித்த காணிகளுக்கு இழப்பீடு!
Monday, March 13th, 2017
பலாலி விமான நிலையத்துக்காக 1952 மற்றும் 1983ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அரசால் சுவீகரிக்கப் பட்டிருந்த 956 ஏக்கர் காணி தொடர்பில் அதன் உரிமையாளர்களை, காணி அமைந்துள்ள கிராம அலுவலர்களிடம் பதியுமாறு கோரப்பட்டுள்ளது.
பலாலி வானூர்தி நிலையம் மற்றும் இராணுவ முகாமுக்காக 1952 மற்றும் 1983ஆம் ஆண்டுகளில் அரசால் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான இழப்பீடு வழங்கப்படவில்லை. இவர் களுக்கான இழப்பீட்டை வழங்கும் நோக்கில் இந்தக் காணி களின் உரிமையாளர்களை இனம்காணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பலாலியில் கடந்த மாதம், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலர் நடத்திய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைவாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசால் சுவீகரிக்கப்பட்ட 956 ஏக்கர் நிலப் பகுதிகளே, பலாலி கூட்டுப்படைத் தளத்தின் நிரந்தர நிலமாகவும் காணப்பட்டது. வானூர்தி ஓடுபாதை, கட்டுப்பாட்டு அறைகள், கட்டுப்பாட்டுக் கோபுரங்கள் என்பன மக்களிடம் சுவீகரிக்கப்பட்டிருந்த காணிகளில் அமைக்கப்பட்டிருந்தன. காணிகள் சுவீகரிக்கப்படும் போது இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த போதும், இதுவரை வழங்கப்பட்டிருக்கவில்லை.
சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களை இனம் கண்டு அவர்களைச் சொந்த நிலத்துக்கு அழைத்துச் சென்று காண்பிக்கப்படும். அவர்களுக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவை வழங்குவதே இதன் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதேநேரம் 1952ஆம் ஆண்டு சுவீகரிக்கப்பட்ட காணிகளின் 3ஆவது தலைமுறையினரே தற்போது வாழ்வதனால், இவர்களால் தமது பூர்வீக நிலத்தை அடையாளம் காண முடியுமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது.
Related posts:
|
|