தூங்கும் பொலிஸார் மீது விரைந்து நடவடிக்கை – ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி!
Monday, March 13th, 2017கடமையின்போது தூங்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஸ்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத் திட்டபகுதியில் உள்ள சிறிநாகபூசணி அம்மன் ஆலயத்தில் கிராம அபிவிருத்திச்சங்கத்தலைவர் கு.சண்முகலிங்கம் தலைமையில் நேற்று ஓமந்தை பொலிஸாருக்கும் அரச ஊழியர் வீட்டுத்திட்ட பகுதியில் வசிக்கும் அரச ஊழியர்களுக்குமிடையே கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் நடைபெற்ற களவு தொடர்பாகக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது-,
இங்கு ஒரு பிரதேச செயலாளர் இருக்கிறார். இங்குள்ளவர்கள் மற்றும் இப்பகுதியில் வேலை செய்யவருபவர்கள் தொடர்பாக நாங்கள் விவரங்களை திரட்ட உள்ளோம் . பற்றைக்காடாகவுள்ள காணிகளின் உரிமையாளர் விவரங்களை கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் கடந்த சிலநாள்களுக்கு முன்னர் தந்தனர். அவர்களுக்குரிய சட்ட நடவடிக்கையை சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுடன் இணைந்து எடுக்கவுள்ளோம்.
திருட்டை பிடிப்பதற்கு உதவியாக வவுனியா மாவட்ட பொலிஸ் நிலையங்களுக்கு ஒரு மோப்ப நாயே உள்ளது. எமக்கும் வளப்பற்றாக்குறை உள்ளது. இரவு 10 மணியிலிருந்து விடியும் வரை ரோந்து நடவடிக்கையை இந்த வீட்டுத்திட்டப் பகுதியில் முன்னெடுக்கவுள்ளோம். எனது தொலைபேசி இலக்கம் இங்குள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கியுள்ளேன். எந்த நேரமும் குற்றச்செயல்கள் தொடர்பாக தொடர்புகொள்ளலாம்.
சந்தேகத்துக்கிடமாக இந்தப் பகுதியில் நடமாடுவோரை உடனடியாக கைதுசெய்து பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்ல எமது பொலிஸ் குழு நடவடிக்கையெடுக்கும். எமது பொலிஸ் குழு விழிப்புடன் செயற்படும்.
அரசஊழியர்கள் காணிகளில் பற்றைகள் இருப்பது அசௌகரியமான விடயம். இதனைதடுக்க பிரதேசசெயலர், சுகாதாரப் பரி சோதகர், வீடமைப்பு அதிகாரசபையினர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்புடன் செயற்படவேண்டும்.
எமது பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமை நேரத்தில் நித்திரை கொள்கிறார்கள் எனச் சிலர் குற்றம் சாட்டினர். அவ்வாறு உறங்கினால் அவர் யார் என்று சொல்லுங்கள் நடவடிக்கை எடுக்கிறேன். எமது பொலிஸ் உத்தியோகத்தர்கள் இரவு பாதுகாப்பு நடவடிக்கையாக சென்று திரும்பிய பின்னர் களைப்பில் நித்திரை கொள்ளலாம். அதற்கு நான் இடமளிக்கமாட்டேன். அரச ஊழியர்கள் வீடுகளில் பொருத்தமான இடத்திலும் வீதிகளை கமராவின் பார்வைக்கு விடவேண்டும்.அண்மையில் நடைபெற்ற களவுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்வோம் என்றார்.
Related posts:
|
|