சாரதியை அடையாளம் காணவே இருண்ட கண்ணாடிச் சட்டம் – போக்குவரத்து பிரிவு பிரதிப் பொலிஸ்மா அதிபர்!

Saturday, January 28th, 2017

வாகனங்களில் அசம்பாவிதங்கள் ஏற்படும் போது, சாரதியை இலகுவாக அடையாளம் காண்பதற்காகவே  இருண்ட கண்ணாடிகள் பயன்படுத்தப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அதிகளவான வாகன விபத்துகளுக்கு  இருண்ட கண்ணாடிகளே காரணம் எனவும் போக்குவரத்து பிரிவு பிரதிப் பொலிஸ்மா அதிபர் பாலித்த பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மோட்டார் வாகனங்களில் சாரதி இருக்கைக்கு இருபுறமும் உள்ள கண்ணாடிகளை திரையிட்டு மறைத்தல் மற்றும் முழுமையாக மறைக்கப்பட்ட இருண்ட கண்ணாடிகளை பயன்படுத்துவோருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சட்டமானது புதியது அல்ல. மோட்டார் வாகனங்களில் இருண்ட கண்ணாடிகளை பயன்படுத்துவதை தடைசெய்துள்ள சட்டமானது புதியது அல்ல, அது தொடர்பான வர்த்தமானி ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. இந்த சட்டம் தொடர்பில், 2003ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதி 1273ஆம் இலக்க வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சாரதி இருக்கையில் இரு புறத்திலும் திரைச்சீலை அல்லது இருண்ட கண்ணாடிகள் பயன்படுத்தப்படக் கூடாது, முன்புற கண்ணாடியில் 80 சதவீதம் மறைக்கப்பட்டிருக்கக் கூடாது. மேலும், பின்பகுதி கண்ணாடிகள் கறுப்பு நிறத்தில் இருக்கலாம். ஆனால், அதில் ஸ்டிக்கர் ஒட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.

சீ.சீ.டிவிகளில் பெறப்பட்ட காட்சிகளில் அடிப்படையில், முச்சந்தி சுற்றுவட்டம் மற்றும் நாற்சந்திகளில் அதிகளவில் வாகன விபத்துக்கள் இடம்பெறுவது கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு பிரதான காரணம், சாரதிக்கு தனது வலது புறத்தில் உள்ள வாகனம் சரியாக தெரியாதமையாகும். வாகனங்களில்  சாரதிக்கு இருபுறமும் இருண்ட மற்றும் திரைச்சீலை பயன்படுத்தி மறைக்கப்பட்ட கண்ணாடிகள் காரணமாக இந்த விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும், வாகன விபத்து அல்லது தவறுகள் செய்பவர்களின் வாகன இலக்கத்தை கொண்டு கண்டுபிடிக்க முடியும். எனினும் இருண்ட கண்ணாடி காரணமாக, வாகனத்தை செலுத்தியது யார் என்பதை அடையாளம் கண்ட சாட்சியினை பெறமுடியாது. எனவே, வாகனத்தை செலுத்துபவர் யார் என்பதை சாரதிக்கு இரு புறம் மற்றும் முன்புறத்தில் இருந்து பார்த்து அடையாளம் காணும் வகையில் இருக்க வேண்டும்.

இதேவேளை, இவ்வாறான இருண்ட கண்ணாடிகளை பயன்படுத்துபவர்கள் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக உடனடியாக வழக்குத் தாக்கல் செய்ய மாட்டோம். முதலில் அவர்கள் மேல் குற்றஞ்சாட்டி, குறிப்பிட்ட நாட்களுக்குள் இருண்ட கண்ணாடி, ஸ்டிக்கர் மற்றும் திரைகளை அகற்றி எம்மிடம் காண்பிக்குமாறு அறிவுறுத்துவோம். அதன்பின்னரும் அவர்கள் இதே தவற்றை செய்தால், அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும்’ என்றார். மேலும், ‘மருத்துவ நிலை மற்றும் பாதுகாப்பு கருதி, இருண்டு  கண்ணாடிகளை பயன்படுத்த முடியும்.எனினும், பொலிஸ்மா அதிபரின் கடிதம் மற்றும் பாதுகாப்பு செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய, மோட்டார் வாகனத் திணணைக்கள ஆணையாளரால் அந்த அனுமதி வழங்கப்படவேண்டும்.அதனைத்தவிர, வேறும் யாரும் இந்த இருண்ட கண்ணாடிகளுடைய வாகனத்தை செலுத்த முடியாது’ என்றார்

post-2135

Related posts: