சரசாலை குருவிகள் சரணாலயத்திற்கு வரும் வெளிநாட்டு பறவைகளை வேட்டையாடும் விசமிகள் – மக்கள் குற்றச்சாட்டு!

Monday, August 10th, 2020

சரசாலை குருவிகள் சரணாலயத்திற்கு வரும் வெளிநாட்டு பறவைகளை விசமிகள் வேட்டையாடி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்.

சரசாலை குருவிகள் சரணாலய பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை நாடி பருவகால வெளிநாட்டு பறவைகள் வருவது வழக்கம். அதனை காண்பதற்கு அயல் கிராமங்கள் உள்ளிட்ட யாழில் பல பகுதிகளில் இருந்து மக்கள் செல்வார்கள்.

குறித்த பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் பெருமளவான பறவைகள் அவ்விடத்திற்கு வரும். அவ்வாறு வரும் பறவைகளை சில விசமிகள் வேட்டையாடி வருகின்றனர்.

வலைகளை பறவைகள் மீது வீசி வேட்டையாடி வருவதனால், தற்போது அப்பகுதிக்கு பறவைகளின் வருகை குறைவடைந்துள்ளது.

ஆள் நடமாட்டம் குறைந்த பகுதிகளில் ஒன்று கூடும் விசமிகள் பறவைகளை வேட்டையாடி வருகின்றனர். சில தடவைகள் ஊரவர்கள் வேட்டையாட முற்பட்ட விசமிகளை மடக்கி பிடித்து எச்சரித்து விடுவித்த போதிலும் அவர்கள் வேட்டையை நிறுத்தாது சன நடமாட்டம் இல்லாத பகுதிகளில் வேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பில் அதிகாரிகள் கவனத்தில் எடுத்து இத்தகைய சட்டவிரோத வேட்டையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts: