குடாநாட்டில் திராட்சை செய்கை கடும் வீழ்ச்சி – விவசாயிகளுக்குப் போதிய பயிற்சி வழங்கவேண்டுமென வலியுறுத்தல்!
Saturday, December 3rd, 2016
யாழ்.மாவட்டத்தில் திராட்சை செய்கை பெரும் வீ;ழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் திராட்சைச் செய்கையை ஊக்குவிக்கும் முகமாக விவசாயிகளுக்கு இது தொடர்பாக போதிய பயிற்சிகள் கொடுக்கப்பட வேண்டும் என விவசாயப் போதனாசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இந்தியாவில் இருந்து வருகைதந்த விவசாய நிபுணர்களுடன் அண்மையில் மாவட்டப் பயிற்சி நிலையத்த்ல் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் தற்போது விவசாயிகள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பாக விவசாயப்போதனாசிரியர்களினால் ஆராயப்பட்டது. 1990க்கு முற்பட்ட காலத்தில் யாழ்ப்பாணத்தில் 300 ஹெக்ரேயர்ருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் திராட்சைச் செய்கை பண்ணப்பட்டது. நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுப்போர் காரணமாக் இடையில் இந்தச் செய்கை கைவிடப்பட்டது. விவசாயத் திணைக்களத்தின் முயற்சியால் இஸ்ரேல் புளு எனும் திராட்சை மீண்டும் 108 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் செய்கை பண்ணப்பட்டது.
தற்போது திராட்சைப் பயிர்களில் ஏற்பட்ட பனிப்பூச்சி, பங்கசு போன்ற நோய்த் தாக்கங்களால் செய்கை மீண்டும் 50வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே, யாழ்.மாவட்டத்துக்குப் பொருத்தமானதும் ஏற்றுமதி செய்யக்கூடியதுமான திராட்சை வகையை அறிமுகம் செய்ய வேண்டும். அத்துடன் திராட்சைச் செய்கைக்குத் தேவையான கத்தரித்தல், பயிற்றுவித்தல் போன்ற தொழில்நுட்பப் பயிற்சிகள் விவசாயிகளக்கு வழங்கப்பட வேண்டும். மழைக்காலங்களில் தக்காளி, பப்பாசி, வெங்காயம் போன்ற செய்கைகளிலும் வீழ்ச்சி ஏற்படுகின்றது.
இந்தக்காலப் பகுதியில் அவற்றுக்கான பெறுமதி சேர் உற்பத்திகளை மேற்கொள்வதற்கு தரமானதும், பொருத்தமானதுமான தொழில்நுட்பங்களையும், இயந்திரங்களையும் அறிமுகப்படுத்த வேண்டும். இதனோடு இணைந்த வகையில் விவசாயிகள் தமது உற்பத்திகளைப் பேரம் பேசி விற்பனை செய்வதற்கான சந்தை முறைமை உருவாக்கப்பட வேண்டும். இதற்கான விவசாய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு உற்பத்திகளைச் சந்தைப்படுத்தும் முறைமை உருவாக்கப்பட வேண்டும். பப்பாசிச் செய்கையில் வெண்மூட்டுப்பூச்சி பெரியளவில் தாக்கத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய பயிர்பாதுகாப்பு முறைமையானது அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
கரட், உருளைக்கிழங்கு போன்ற பயிர்களில் தாக்கும் நிமற்றோட் தாக்கத்தைக் கட்டுபடுத்துவதற்கு விவசாயிகளினால் காபோபியூரான் எனும் களைநாசினி விசிறப்பட்டு வந்தது. தற்போது அந்த வகை களைநாசினி அரசினால் தடைசெய்யப்பட்டுள்ளது. இதற்கான பொருத்தமான பயிர் பாதுகாப்பு முறைமை விரைவில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்ற விவசாயப் போதனாசிரியர்களால் வலியுறுத்தப்பட்டது.
Related posts:
|
|