இலத்திரனியல் கழிவுகளை எறியாது மாநகரசபையிடம் ஒப்படையுங்கள் – ஆணையாளர் வேண்டுகோள்!
Thursday, November 3rd, 2016
மின்சாரம் மற்றும் இலத்திரனியல் கழிவுப் பொருட்களை கண்டபடி எறியாது அதனை சேகரித்து யாழ்.மாநகரசபையிடம் ஒப்படைத்தால் சிறந்த திண்மக்கழிவு முகாமைத்துவத்தை பின்பற்ற முடியும். சுற்றுச் சூழலை பாதுகாத்தவர்களாகவும் மாற முடியும். இவ்வாறு யாழ்.மாநகரசபை ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார். யாழ்.மாநகரசபையில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட உணவகங்களின் உரிமையாளர்களுக்கான திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது:
வீடுகளில் பாவனைக்கு உதவாத மின்சார மற்றும் இலத்திரனியல் பொருள்களை, பாவனை முடிந்ததும் எல்லோரும் எறிகின்றனர். இவை நீண்ட காலத்துக்கு உக்காது நிலத்தையும், நிலத்தடி நீரையும் மாசுபடுத்துகின்றன. பாவனைக்கு உதவாத மின்குமிழ்கள், இறுவெட்டுக்கள், தொலைக்காட்சிப்பெட்டிகள், வானொலிப்பெட்டிகள், மற்றும் இதர மின்சார இலத்திரனியல் பொருள்களை சேகரித்து அதனை மாநகரசபையிடம் ஒப்படைக்கும்போது அதனை மீள்சுழற்சிக்காக இங்கிருந்து முற்றாக அகற்றலாம். கடந்த ஒரு வார காலமாக யாழ்.மாநகரசபையுடன் இணைந்து மத்திய சுற்றாடல் அதிகாரசபை சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்குடன் யாழ்.மாநகரசபை எல்லைப் பகுதிக்குள் சேகரிக்கப்பட்ட பொலித்தீன், பிளாஸ்ரிக், மின்சார மற்றும் இலத்திரனியல் கழிவுகளை மீள் சுழற்சிக்காக எடுத்துச் சென்றுள்ளனர். சூழலுக்கு பெரும் அழிவை ஏற்படுத்தக்கூடிய இவ்வாறான பொருள்களை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்வது எல்லோருடைய பொறுப்பாகும். – என்றார்.
Related posts:
|
|