இலங்கையிலிருந்து 174 இந்திய பிரஜைகள் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர்!

Thursday, August 27th, 2020

இலங்கையில் சிக்கியிருந்த 174 இந்திய பிரஜைகள் விசேட ஏர் இந்தியா விமானம் (AI 0282) மூலமாக கடந்த 25ஆம் திகதி கொழும்பிலிருந்து டில்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் என இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிக்கையில், “கொவிட்-19 காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் உலகளவில் சிக்கியிருக்கும் இந்திய பிரஜைகளை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான, இந்திய அரசின்  “வந்தே பாரத் மிஷன்” திட்டத்தினுடைய ஓர் அங்கமாக இந்த விமானப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொவிட் 19 காரணமாக சர்வதேச பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் சிக்கியிருந்த இந்திய பிரஜைகள், சொந்தநாடு நோக்கிய தமது பயணம் குறித்து மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியிருந்தனர்.

கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கு ஜூன் 01ஆம் திகதி இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் ஜலஷ்வா கப்பற் சேவை, ஏனைய பல விசேட விமான சேவைகள் மற்றும் இன்றைய விமான சேவை உட்பட்ட சேவைகள் மூலமாக 2000 க்கும் அதிகமான இந்திய பிரஜைகள் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் இந்த விமானத்திற்கான பயணிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் அவசரமாக நாடு திரும்ப வேண்டிய நிலையில் இருப்பவர்களுக்கு,  குறிப்பாக நிர்க்கதியாகியுள்ள குடிபெயர் தொழிலாளர்கள்,  விசா காலாவதியான நிலையில் தங்கியிருப்பவர்கள், மருத்துவ உதவிகள் தேவைப்படுவோர், கர்ப்பிணிகள், பெண்கள், முதியவர்கள், குடும்ப உறுப்பினரின் மரணத்தை தொடர்ந்து உடனடியாக இந்தியா திரும்புவதற்கு கோரிக்கைகளை முன் வைத்திருப்போர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு வெளிநாடுகளில் சிக்குண்டிருப்பவர்களுக்காக இந்திய உள்துறை அமைச்சினால்   வெளியிடப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட செயற்பாட்டுமுறைமையின் பிரகாரம், முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் தங்கியிருக்கும் இந்திய பிரஜைகள் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் அறிவித்தல்களை அறிந்து கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கொரோனா அச்சுறுத்தல் : 12 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளனர் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்ப...
இரண்டு மாத காலப்பகுதி வீதி விபத்துக்களில் 450 க்கும் அதிகமானோர் பலி - பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்ப...
புதிய வகை ஒமைக்ரோன் கொரோனா வைரஸ் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை - பிரபல மருத்துவ நிபுணர் ககன் தீப் ...