இராணுவத்தால் கைது செய்யப்பட்ட மகன் அமைச்சருடன் : தகவல் வழங்கக்கோரும் தாய்.!
Tuesday, March 7th, 2017
2006ஆம் ஆண்டு இராணுவத்தினர் கைது செய்த தனது மகனின் புகைப்படம் 2007ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் கொழும்பு தினசரிப் பத்திரிகையில் வெளியானது. இது குறித்து தற்போது கேட்டால் எதுவும் தெரியாது என சுலபமாக கைவிரிக்கின்றார்கள் என காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடும் தாய் ஒருவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி வருகையின் போது போராட்டத்தில் ஈடுபட்ட தாய் ஒருவரே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
22 வயதுடைய தனது மகனை நல்லூர் அரசடிப் பகுதியில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் கைது செய்து அழைத்து சென்றனர்.
அதன் பின் எனது மகன் தொடர்பில் பல இடங்களில் முறையிட்டேன். நானும் தினமும் தேடி அலைந்தேன். மகன் விடுவிக்கப்பட வில்லை. மகன் இருக்கும் இடத்தைக்கூட படையினர் தெரிவிக்கவில்லை.
இவ்வாறே நாட்கள் கடந்து செல்ல 2007ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு அமைச்சர் இராதாகிருஷ்ணன் சென்று கைதிகளுடன் உரையாடினார்.
இவ்வாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது சந்தித்த புகைப்படமானது பத்திரிகையின் முகப்பில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதில் உள்ள ஒரு சிலரில் எனது மகன் நிற்பதனை நான் கண்டேன்.
அதை ஆதாரமாக வைத்து பல இடங்களையும் தொடர்பு கொண்டேன். இன்று வரையில் எனது மகனைக் காட்டவும் இல்லை, விடுவிக்கவும் இல்லை.
சோதனைச் சாவடியில் வைத்து கடத்தப்பட்டு பூசா தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தமைக்கான ஆதாரம் உள்ளன. எனது மகனான அரிணகிரிநாதன் சுதன் தொடர்பில் இந்த அரசு பதில் கூறவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும், தனது மகன் தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சரான இராதாகிருஷ்ணன் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|