அடையாள அட்டையை மீட்க கேணிக்குள் குதித்த மாணவன் பரிதாபகரமாக பலி!

Wednesday, November 8th, 2017

தவறி விழுந்த அடையாள அட்டையை மீட்க கேணிக்குள் குதித்த மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நேற்று மானிப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மானிப்பாய் இந்துக் கல்லூரியில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மானிப்பாய் லோட்டன் வீதியை சேர்ந்த சூரியகுமார் புகனீதன் (வயது-16) என்பவரே மேற்படி உயிரிழந்தவராவார்.

நேற்றைய தினம் பாடசாலையில் பரீட்சை எழுதிவிட்டு நண்பகல் 12.30 மணியளவில் நண்பர்களுடன் குறித்த மாணவன் வீட்டுக்குச் சென்றுள்ளார். செல்லும் வழியில் பிள்ளையார் கோவில் கேணிக்கு அருகில் குறித்த மாணவனின் கொம்பாஸ் நிலத்தில் உள்ள வெள்ளத்தில் விழுந்துள்ளது.

அதை எடுத்து உதறிய போது அருகில் இருந்த கேணிக்குள் மாணவனினுடைய அடையாள அட்டை விழுந்துள்ளது. உடனடியாக குறித்த மாணவன் தனது அடையாள அட்டையை மீட்க கேணிக்குள் குதித்துள்ளார். அவருடன் சென்ற மாணவர்களில் இருவரும் அவரைக் காப்பாற்ற குதித்துள்ளனர். ஆனால் அவரைக் காப்பாற்ற முடியாமல் கேணியில் இருந்த கம்பியைப் பிடித்து மேலே வந்துள்ளனர். ஆனால் குறித்த மாணவன் நீச்சல் தெரியாத காரணத்தினால் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மரண விசாரணையை யாழ். போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related posts: