வடபகுதி உடகவியலாளர்களுக்கும் அரசின் வரப்பிரசாதங்கள் கிடைக்கவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Saturday, March 23rd, 2019

தென்பகுதி ஊடகவியலாளர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வருகின்ற சலுகைகள் வடக்கு ஊடகவியலாளர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற விடயத்தை நான் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றேன். இந்தக் கோரிக்கையினை தற்போதைய ஊடக அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் அவதானமெடுத்து செயற்படுவார் என நினைக்கின்றேன். அவரும் ஒரு ஊடகவியலாளர் என்ற ரீதியில் அவர் இதனைப் புரிந்து கொள்வார் என நம்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு, வெகுசன ஊடகத்துறை பற்றிய அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சு ஆகிய இரு அமைச்சுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

அதே நேரம், வடக்கிலே செயற்பட்டு வருகின்ற சில ஊடக நிறுவனங்கள் பணியாளர்களின் ஊதியத்திலிருந்து ஊழியர் சேமலாப நிதிக்கென அறவீடுகளை மேற்கொள்கின்ற போதிலும், அவற்றை ஊழியர் சேமலாப நிதியத்தில் வைப்பிலிடாமல் ஏமாற்றி வருகின்ற கைங்கரியங்களில் ஈடுபட்டு வருவதால், பல ஊடகவியலாளர்களுக்கு அவர்களது இத்தகைய  தொழில் ரீதியிலான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் மிகுந்த பாதிப்புகளுக்கு உட்படுகின்றனர். இவர்கள் தொடர்பில் ஒரு பொறிமுறை வகுக்கப்பட வேண்டியிருக்கின்றது.

அதேநேரம், கடந்த காலங்களில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் சில விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையினில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் தொடர்ந்தும் மௌனமே சாதிக்கப்பட்டு வருகின்றது. இவ்விடயம் தொடர்பில் நான் பலமுறை எடுத்துக் கூறியிருக்கின்றேன்.

எனவே, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, உண்மை நிலைமைகளை மக்கள் அறிவதற்கு வழிவகுக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும். அதேநேரம், கொல்லப்பட்ட ஊடகவியலாளர் குடும்பங்களுக்கும், கடந்த கால யுத்த காலகட்டத்திலும், அதற்;குப் பின்னைய காலங்களிலும், வன்முறைச் செயற்பாடுகள் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள  ஊடகவியலாளர்களுக்கும் இழப்பீட்டுத் தொகையொன்றை விசேட ஏற்பாடாக வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.

Related posts:

மக்கள் விரும்பிய ஆட்சி உருவாகுவதற்கு அயராது உழைத்தவர் அமரர் ரஞ்சித் டி சொய்சா – அனுதாபப் பிரேரணையில்...
இளைஞர் யுவதிகளுக்கு கரங்கொடுப்போம் கௌரவமான வாழ்விற்கு வழியமைப்போம்: வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் சூளு...
பூச்சாண்டிகளை புறந்தள்ளி மக்களுக்கான திட்டங்கள் தொடரும் - கௌதாரிமுனையில் அமைச்சர் டக்ளஸ் உறுதிபடத் ...