வாழ்வாதார மேம்பாட்டுக்காக நலத்திட்டங்களில் மட்டும் தங்கியிராது சுயதொழில் முயற்சிகளிலும் கூடுமானவரை ஈடுபட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Friday, December 22nd, 2023பொருளாதார நிலமைகளால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் தமது வாழ்வாதார மேம்பாட்டுக்காக கடன்களிலும் அரசு வழங்கும் நலத்திட்டங்களில் மட்டும் தங்கியிருக்காமல் சுயதொழில் முயற்சிகளிலும் கூடுமானவரை ஈடுபடுவதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடன் கட்சியின் யாழ்ப்பாணத்திலுள்ள தலைமையகத்தில் இன்று (22.12.2023) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அமைச்சர் மேலும் கூறுகையில் – தற்போதைய சூழலில் உள்ளூர் உற்பத்திகளில் கூடிய அக்கறை செலுத்துவது மிகவும் அவசியமாகும். அத்துடன் இது தூர நோக்கம் கொண்ட முயற்சியுமாகும்
மாதிரி விவசாயக் கிராமங்களை உருவாக்குவதன் மூலம் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் குறைந்தளவு நீரைப் பயன்படுத்தி செலவுகளைக் குறைத்து பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
இவ்வாறு செய்வதன் மூலம் குடும்ப பொருளாதாரத்தை மேம்படுவதுடன் ஆரோக்கியமான உணவையும் பெறக்கூடியதாக இருக்கும்.
இவற்றுக்கு தேவையான ஆலோசனைகள், வழிகாட்டல்களை வழங்க கமத்தொழில் திணைக்கள அதிகாரிகள் தயாராகவே இருக்கிறார்கள்
அந்தவகையில் எமது மக்களிடம் இது விடயமாகவும் கிராமங்கள் தோறும் தெளிவூட்டல்கள் செய்யப்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே
யாழ் மாவட்ட கடற்றொழில் கிராமிய அமைப்புகளின் சம்மேளன பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினர்.
கடற்றொழில் அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற இக்கலந்துரையாடலின் போது கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பட்ட பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வினை காணுவது தொடர்பிலேயே இக் கலந்துரையாடலில் பிரஸ்தாபிக்கப்பட்டது.
குறிப்பாக, கடற்றொழில் சார்ந்த மக்களின் வாழ்வாதாரத்தினை மேலும் வலுப்படுத்துவதற்கு நீர்வேளாண்மையை சாத்தியமான இடங்களில் விருத்தி தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|