யாழ். காணிகளை விடுவிப்பது தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்!
Tuesday, June 6th, 2023
யாழ். மாவட்டத்தில் படையினர் வசமிருக்கும் காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்முயற்சியில், ஜனாதிபதியின் செயற்குழுப பிரதாணி சாகல ரத்நாயக்கா தலைமையில் நடைபெற்றது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று(06.06.2023) நடைபெற்ற இக்கலந்துரையாடலில், காணிகளை விடுவிப்பது தொடர்பாக தீர்மானம் மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய குழு ஒன்றினை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தரப்பினரையும் பொலிஸாரையும் உள்ளடக்கிய குறித்த குழு குறுகிய காலப் பகுதிக்குள், அதிகபட்சமாக விடுவிக்கக் கூடிய காணிகளை அடையாளப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று, வலி வடக்கு பிரதேசத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு காலப் பகுதியில் அரசுடமையாக்குவது தொடர்பாக வர்த்தமாணி வெளியிடப்பட்ட சுமார் 6000 ஏக்கர் காணிகளில சுமார் 3000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டிருப்பதால் குறித்த வர்த்தமானியை மீளப் பெறுவதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், காணி விடுவிப்பு தொடர்பான தெளிவூட்டல்களை மக்களுக்கு வழங்கி, மக்களின் ஒத்துழைப்புடன் காணிகளை விடுவிப்பதற்கு தேவையான காணி அளவீடுகளை மேற்கொள்வதற்கும், இன்னும் நலன்புரி முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுத்து மீள்குடியேற்றுவதற்கும் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்றைய கலந்துரையாடலில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னக்கோன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ன, முப்படைகளின் தளபதிகள் மற்றும் கடற்றொழில் அமைச்சரின் ஆலோசகர் எஸ்.தவராசா, யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் உட்பட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஊடகப் பிரிவு:- கடற்றொழில் அமைச்சர் – 06.06.2023
Related posts:
|
|
|


