யாழில் 5000 கிலோ நண்டுகளை கொள்வனவு செய்ய தனியார் நிறுவனம் இணக்கம் – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Saturday, October 31st, 2020

யாழில் அறுவடை செய்யப்படும் கடலுணவு உற்பத்திகளை தனியார் நிறுவனம் ஊடாக கொள்வனவு செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடடிவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், நாள் ஒன்றிற்கு சுமார் 5000 ஆயிரம் கிலோ கிராம் நண்டுகளையும் மற்றும் இறால் கணவாய் போன்றவற்றையும் கொள்வனவு செய்வதற்கு தனியார் நிறுவனம் ஒன்று ஒப்புதல் அளித்துள்ளது.

கொவிட் 19 காரணமாக யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு மாற்று ஏற்பாடுகளை கண்டறியும் நோக்கில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று(31.10.2020) நடைபெற்ற கலந்துரையாடலிலேயே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ். மாவட்ட செயலரின் பிரதிநிதி, கடற்றொழில் திணைக்களத்தின் அதிகாரிகள், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.

இந்நிலையில், கொறோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருக்கின்ற தமது தொழிற்சாலைகளை செயற்பட அனுமதிக்கும் பட்சத்தில் நாளாந்தம் சுமார் 7000 கிலோகிராம் நண்டு மற்றும் கணவாய், இறால் போன்றவற்றை தம்மால் கொள்வனவு செய்ய முடியும் என்று தனியார் நிறுவனம் ஒன்று உறுதியளித்தது.

இதனையடுத்து, வடக்கு மாகாண சுகாதார சேகைள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி கேதீஸ்வரன், குறித்த தொழிற் சாலைகளை உடனடியாக தொற்று நீக்கம் செய்து செயற்படுவதற்கான அனுமதியை வழங்குவதாக அமைச்சருக்கு உறுதியளித்ததுடன் அதுதொடர்பான நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொண்டார்.

அதேபோன்று, இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபன அதிகாரிகளும் கடற்றொழிலாளர்களிடம் இருந்து மீன்களை நியாய விலைக்கு கொள்வனவு செய்வதாக உறுதியளித்ததுடன் கருவாடுகளையும் கொள்வனவு செய்து சதோச விற்பனை நிலையங்களின் ஊடாக விற்பனை செய்வதற்கு சம்மதம் தெரிவித்தனர்.

இந்நிலையில், கடற்றொழிலாளர்கள் அனைவரும் சுய பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு சமூக பொறுப்பினையும் கருத்தில் கொண்டு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் எனவும் அவர்களின் அறுவடைகளுக்கு சரியான சந்தை வாய்ப்பினை பெற்றுத் தருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைளும் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்காலத்தில் அனைத்து விதமான சட்ட விரோத மீன்பிடி முறைகள் அனைத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

மேலும், சட்ட விரோத மீன்பிடி முறைகளில் ஈடுபடுகின்றவர்களை கட்டுப்படுத்துவதற்கு கடற்றொழில் திணைகள அதிகாரிகள் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான தீர்மானங்கள் மருத்துவ சபையின் பங்களிப்புடன் எடுக்கப்பட வேண்டும் ...
மயிலிட்டி மீன்பிடி இறங்கு துறைக்கான எரிபொருள் வழங்க ஏற்பாடு: அமைச்சர் டக்ளஸின் முயற்சியில் உடன்படிக...
தேச விடியல் நேசர் அமரர் கார்த்திகேசு வேலும்மயிலும் அவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரிய...