மன்னார் மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையால் வழங்கப்பட்ட வீடுகளுக்கான நிதியை விடுவிப்பதற்கு ஏதேனும் தடைகள் உண்டா? டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் கேள்வி!

Friday, September 20th, 2019

மன்னார் மாவட்டத்தில் மன்னார். நானாட்டான், முசளி, மாந்தை மேற்கு ஆகிய நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் 139 மாதிரிக் கிராமங்களுக்கென 3285 வீடுகள் தலா 7 இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபா வீதம் கட்டம் கட்டமாக கட்டுமானப் பணிகள் மேற்கொள்கின்றபோது, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மூலம் வழங்குவதற்கான ஏற்பாட்டுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இருந்தும், மிகவும் வறுமை நிலையில் வாழ்ந்து வருகின்ற மேற்படி பயனாளிகளில் பெரும்பாலோனோர் நுண் கடன் போன்ற கடன் திட்டங்கள் மூலமாக கடன்களைப் பெற்றுக் குறிப்பிட்ட மட்டம் வரையில் கட்டடங்களை அமைத்தும், தேசிய வீடமைப்பு அதிகார சபையானது குறிப்பிட்ட நிதியை விடுவிக்காமையினால் மேற்படி வீடுகளைப் பூர்த்தி செய்ய இயலாதிருப்பதாகவும், பெற்ற கடன்களை மீளச் செலுத்த இயலாதிருப்பதாகவும் தெரிய வருகின்றது.

மேலும், மேற்படி வீடுகளை அமைப்பதற்காக இப் பயனாளிகள் ஏற்கனவே குடியிருந்த குடிசை வீடுகளையும் அகற்றி இருப்பதால்,  மழைக் காலம் ஆரம்பமாகும் நிலையில், பூர்த்தி செய்யப்படாத வீடுகளில் பெரும் பாதிப்புகளுடனேயே வாழ வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில் இத்தகைய பிரச்சினைகள் அநேகம் நிலவி வருவதும் குறிப்பிடத்தக்கது.

எனவே,

மேற்படி நிதியை விடுவிப்பதற்கு ஏதேனும் தடைகள் உண்டா? 3285 வீடுகளுக்குரிய குறிப்பிட்ட நிதியானது தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மூலமாக எப்போது விடுவிக்கப்படும்? அதேபோன்று, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இத்தகைய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு மக்களை இனங்கண்டு, அவர்களுக்கும் சாதகமானதொரு தீர்வினை விரைவில் வழங்க முடியுமா?

மேற்படி கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்களையும் கௌரவ அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற 27/2 நியதிச் சட்டத்தின் கீழான கேள்வி நேரத்தின்போதே  டக்ளஸ் எம்பி இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: