பூநகரி பிரதேசத்திற்கான குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்: நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, July 20th, 2016

பூநகரி பிரதேச மக்களுக்கான குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்றத்தில் 23/2 வினா நேரத்தின்போது குறித்த பகுதி மக்களது குடிநீர் விடயம் தொடர்பாக பல கோரிக்கைகளை முன்வைத்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களிடம் இவற்றுக்கான தீர்வை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் தனது உரையில் –

கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பூநகரி பகுதி மக்கள் பல இடர்பாடுகளை சந்தித்திருந்ததுடன் தற்போது மீளவும் அப்பகுதியில் குடியமர்ந்துள்ள நிலையில் பல அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் வசித்து வருகின்றார்கள்.

இம்மக்களின் அத்தியாவசிய தேவைகளில் பிரதானமான ஒன்றாக குடிநீர் பிரச்சினை உள்ளது. மேலும் இப்பிரதேசத்திற்குள் முற்றுமுழுவதுமாக நீர் விநியோகம் செய்யக்கூடிய நீர் நிலைகள் காணப்படாமை, தற்போது இருக்கும் கிணறுகளில், குளங்களில் கோடை காலங்களில் நீர் எடுக்க முடியாத நிலை, தொடர்ந்து நீர் எடுப்பதால் நீரின் தன்மை மாறுபடல் போன்ற காரணங்களால் இக் குடிநீர் பிரச்சினையை  போதியளவு தீர்க்க முடியாதுள்ளது.

இருந்தும் பூநகரி பகுதிக்கு நிரந்தரமாக நீர் வழங்கக்கூடியதான இரு திட்டங்கள் இனங்காணப்பட்டுள்ளன. ஒன்று – பூநகரிக் குள அபிவிருத்தித் திட்டத்தின் மூலமான நீரைப் பெற்றுக் கொள்வது. இதன் மூலம் நிலத்தடி நீரை நன்னீராக மாற்றுவதன் ஊடாக குடி நீரையும், விவசாயம், கால்நடைகளை அபிவிருத்தி செய்வதற்கான நீரையும் வழங்குவது. இது நீண்ட காலத் திட்டமாகும்.

அடுத்து  இரணைமடு – யாழ்ப்பாணம் குடி நீர் மற்றும் சுகாதாரத் திட்டத்தின் அடிப்படையில் குழாய் மூலம் இப்பகுதி மக்களின் குடி நீர்ப் பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு காண முடியும். இது இடைக் காலத் திட்டமாகும். எனவே, இப்பகுதி மக்களின் கோரிக்கைகளுக்கமைவாக நான் இவ்விரு திட்டங்களையும் வலியுறுத்தி வருகின்றேன். இத் திட்டங்கள் செயற்படுத்தப்படும் வரை இப்பகுதி மக்களின் குடி நீர்த் தேவையை முன்னிறுத்தி தற்காலிக, உடனடி  ஏற்பாடுகள் அவசியமாகின்றன.

எனவே குறித்த கிராமங்களுக்கு போதியளவு குடி நீரை வழங்க 12,500 லீற்றர் கொள்ளளவு உடைய லொறி பௌசர்கள் இரண்டையும், 3,500 லீற்றர்கள் கொண்ட ரக்டருக்குரிய பௌசர்கள் இரண்டையும் பூநகரி பிரதேச சபைக்கு வழங்க நடவடிக்கை எடுக்க முடியுமா? என கோரிக்கையை முன்வைத்துள்ளதுடன் இதற்கான தீர்வை விரைவாக எதிர்பார்ப்பதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Related posts:

அடுத்த ஐந்து வருடத்தில் தீவக பகுதியை செல்வம் கொழிக்கும் பகுதியாக மாற்றுவேன் – தீவகத்தில் டக்ளஸ் எம்...
சட்ட விரோத மணல் அகழ்வு குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்குமாறு மாவட்ட பிரதிப் பொலிஸ...
சக மதங்களை பாதிக்காத வகையில் ஒவ்வொருவருடைய மத உணர்வுகளும் பாதுகாக்கப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வ...

யாழில் அதிகரிக்கும் குற்றச் செயல்களின் பின்னணிகள் கண்டறிதல் அவசியம் -   டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து
ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள், பொறுப்பாளர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வ...
நீர்வேளாண்மை மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு கணிசமான பங்களிப்பு. - அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்!