சிலைகளுக்கு உயிர்கொடுத்த பெருங்கலைஞர் சிவப்பிரகாசம்! செயலாளர் நாயகம் புகழாரம்.

Monday, July 11th, 2016
தமிழர்களின்கலை,கலாசாரம் மற்றும் வரலாற்றுப் பதிவுகளை பிரதிபலிக்கக்கூடியவகையில் சிலைகளாகவும், கலை வடிவங்களாகவும் வெளிக்கொண்டு வருவதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தவர் அமரர் கலாநிதி சிவப்பிரகாசம் அவர்களென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
மேலும் செயலாளர் நாயகம் அவர்கள் உரையாற்றும்போது, எனது சிறுவயதிலிருந்தே அமரர் சிவப்பிரகாசம் ஆசிரியரைத் தெரிந்திருந்ததுடன், திரு,திருமதிசிவப்பிரகாசம் தம்பதியரும், எனது தாயாரும் யாழ். மத்திய கல்லூரியில் ஆசிரியப்பணி புரிந்துவந்த நிலையில் எமக்கிடையே நெருக்கமானகுடும்ப உறவும் இருந்தது. அதேநேரம் யாழ்,மத்தியகல்லூரியில் எனது ஆசானாகவும் அவரை நன்கு அறிவேன். பிற்காலத்தில் தமிழர்களின் கலை,வரலாறுகளை வளர்த்தெடுப்பதில் இருவருக்கும் கொள்கைரீதியான இணக்கப்பாடும் இருந்தது. இந்திலையில்தான் அவரது இழப்பு எனக்கு மட்டுமல்லாது அவரிடம் கல்விகற்ற அனைவருக்கும் பேரிழப்பு என்பதுடன் கலை உலகிற்கும் பாரிய இழப்பாகும்.
அவரது முதுமைக் காலத்திலும், தமிழ் மன்னர்களுக்கு எமது மண்ணில் சிலையமைக்கவேண்டும் என்ற எனது எண்ணத்திற்கு செயல்வடிம் கொடுத்த மாபெரும் சிற்பக் கலைஞனாகவே நான் அவரைப் பார்க்கின்றேன். எனது எண்ணத்தை ஈடேற்றும் வகையில் தமிழ் மன்னர்களான பரராஜசேகரன், பண்டாரவன்னியன், எல்லாளன் ஆகியோரின் சிலைகளை யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக் கோபுர சுற்றுவட்டத்தில் கம்பீரத்துடன் நிறுவுவதற்கு தனது முழுப்பங்களிப்பையும் வழங்கியிருந்தார்.
அதுபோலவே கருத்துவேறுபாடுகளுக்கு அப்பால், தமிழ் மக்களின் விடுதலைக்காக ஜனநாயக வழிமுறையிலான போராட்டத்தினூடாகவும், ஆயுதப் போராட்டத்தினூடாகவும்  தமிழ் மக்களின் விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்த தமிழ்த் தலைவர்களினதும், போராளிகளினதும் உருவச்சிலைகளை அவர்களை நினைவு கூரும்விதமாக ,யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியைச் சுற்றி நிறுவவேண்டுமென்றும் எண்ணியிருந்தேன். எனது எண்ணத்திற்கு உயிர் வடிவம் கொடுப்பதற்கு அமரர் சிவப்பிரகாசம் அவர்களும் முன்வந்திருந்தார். அதுமட்டுமன்றி எனது எண்ணத்தை ஈடேற்றும் வகையில் அதற்கான தயாரிப்புபணிகளைத் தொடங்கியிருந்தார். இந்தவேளையிலேயே அவர் எம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார்.
அந்தவகையில் தமிழர்களின் வரலாற்றையும், கலைவடிவங்களையும் எதிர்காலச் சந்ததிக்கு எடுத்துக்கூறும் பொருட்டும், அவற்றைப் பாதுகாக்கும் பொருட்டுமான எங்கள் இருவரது எண்ணங்களும் ஒன்றாகவே இருந்தது. ஆகவே அமரர் சிவப்பிரகாசம் அவர்கள் இன்று எம்மைவிட்டுப் பிரிந்துவிட்டாலும் நாம் விரும்பியிருந்த வரலாற்றுப் பணிகளை அவரது சீடர்களின் பங்களிப்போடு நிறைவேற்ற முடியுமென நான் நம்புகின்றேன். அதற்காக நான் உழைப்பேன்.
இதேவேளை வடக்கில் அமைக்கப்பட்டுள்ள யுத்த வெற்றிச் சின்னங்களை அகற்ற வேண்டும் என்றும், யுத்தத்தில் உயிர் நீத்த அனைவரையும், நினைவு கூறும் வகையிலும், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், நினைவுச் சதுக்கம் ஒன்றை அமைத்து அந்தப் பிரதேசத்தை புனிதப் பிரதேசமாக அறிவித்துப் பாதுகாக்கவேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை ஒன்றையும் சமர்ப்பித்திருந்ததையும் இங்குசுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்றும் செயலாளர்  நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது இரங்கல் உரையில் குறிப்பிட்டார்.
கொழும்பு கல்கிசை மகிந்த மலர்சாலையில் இன்றையதினம் (11.07.2016) நடைபெற்ற சிற்பக்கலைஞர் கலாநிதிசெல்லையா சிவப்பிரகாசம் அவர்களில் இறுதிக் கிரியைநிகழ்வுகளில் கலந்துகொண்டு இரங்கலுரை நிகழ்த்தும்போதே இவ்வாறு தெரவித்தார்.

DSCF1168

DSCF1170

DSCF1219

DSCF1203

DSCF1238

DSCF1239

Related posts:

சமூகத்தின் நற் பிரையைகளை வளர்க்கும் களமாக விழங்குவது சனசமூக நிலையங்கள்  – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவ...
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வுகளை நோக்கியதாகவே எமது பயணங்கள் தொடரும் - வவுனிய...
அமைச்சரகள் டக்ளஸ் தேவானந்தா - ஆறுமுகன் தொண்டமான் இடையே யாழ்ப்பாணத்தில் முக்கிய சந்திப்பு!