சட்ட விரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு அரச அதிகாரிகள் சமூக சிந்தனையோடு செயற்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Wednesday, March 15th, 2023

இளைய தலைமுறையினரை பாதிக்கும் சமூக சீர்கேடுகளையும் சட்ட விரோதச் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் சமூக சிந்தனையோடு செயற்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்த்தக் கலந்துரையாடல் கருத்து தெரிவிக்கும் போதே, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் மாவட்ட செயலாளர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள், கல்வி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் மற்றும் துறைசார் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதில் பிரதானமாக போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது உணவுப் பாதுகாப்பு, சட்டவிரோதமான அகழ்வு, கல்வி, சுகாதாரம் இவ்வாறான பல விடயங்கள் இந்த மாவட்ட மக்கள் எதிர்கொள்கின்ற முக்கியமான விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “போதைப்பொருள் பாவனை என்பது நாடுதழுவிய ரீதியில் மக்களை, குறிப்பாக இளம் சமுதாயத்தினரைப் பாதித்து வருகின்றபடியால் நாங்கள் அதற்கு முன்னுரிமை கொடுத்து இதனை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் அதற்குரிய நடவடிக்கைகள் விழிப்புணர்வு மற்றும் சட்ட நடவடிக்கைகள் ஊடாக அவற்றை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பது பற்றி நாங்கள் கலந்துரையாடி அதன் முன்னேற்றம் குறித்து ஆராயும் பொருட்டு இரண்டு வாரங்களுக்குள் மீண்டும் கூட இருக்கின்றோம் என தெரிவித்தார்.

இந்நிலையில் நெல் கொள்வனவு தொடர்பில் கருத்துரைத்த அமைச்சர் – ஒவ்வொரு மாவட்டத்திலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கக்கூடியவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் ஒரு குறிப்பிட்ட தொகை அரிசியை விநியோகிக்கவேண்டும் என்ற அரசாங்கத்தின் முடிவை ஜனாதிபதி வெளிப்படுத்தியிருந்தார்.

அந்தவகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிலோ நெல்லை 100 ரூபாய் வீதம் கொடுத்து கொள்முதல்செய்யுமாறும் அவர் அறிவித்திருந்தார்.

அதனடிப்படையில், கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இதுவரை 585,832 கிலோ நெல் கொள்வனவு செய்யப்பட்டிருக்கின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கிட்டத்தட்ட 30,171 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. அந்தக் குடும்பங்களுக்கு அவை பகிர்ந்தளிக்கப்படும்.

இதேவேளை காற்றாலை மின் உற்பத்தி, சூரியஒளி மின்சாரம் போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விஞ்ஞானபூர்வமாக ஆய்வுசெய்த பின்னர் சூழலுக்கு பாதிப்பேற்படாத வகையில் இவ்வாறான திட்டங்களை முன்னெடுப்பதற்கு உத்தேசித்திருக்கின்றோம்.

எந்தப் பகுதியில் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறதோ அப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு 24 மணித்தியாலமும் தடையில்லாத மின்சாரத்தையும் அப்பகுதி மின் பாவனையாளர்களுக்கு அவற்றைகுறைந்த விலையில் கொடுப்பதற்கு ஏற்பாடுசெய்யப்பட்டு வருகிறது.

திட்டத்தை முன்னெடுக்கும் முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடி எமது மக்களுடைய நீடித்த நிலையான ஒரு கௌரவமான வாழ்வாதாரத்துக்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இவற்றைவிட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணிப் பங்கீடு சம்பந்தமாகவும் அதனை மீளாய்வு செய்வது தொடர்பாகவும், சட்டவிரோத மணல் அகழ்வு காரணமாக கண்ணிவெடி அகற்றப்படும் பிரதேசங்களின் வேலைத்திட்டங்கள் பின்தள்ளிச் செல்லப்படுவதாகவும் சொல்லப்பட்டு அது சம்பந்தமாக கலந்துரையாடி முடிவுகளை எடுத்திருக்கின்றோம்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது 72 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன் சத்திர சிகிச்சைகளும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அதற்கு முன்னுரிமை அடிப்படையில் பட்டியலிடப்பட்ட அறிக்கையொன்றை உடனடியாக சமர்ப்பிக்குமாறு தெரிவித்த அமைச்சர் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:

சுகாதாரத் தொண்டர்களுக்களுக்கு நியாயமான முறையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு நிரந்தர நியமனம் வழங்கப...
திட்டங்களை ஆராய்வதற்கான குழு அமைத்த அமைச்சர் டக்ளஸ் - ஜனாதிபதி மாளிகையையும் பார்வையிட்டார்!
சர்வதேச கடற்றொழிலாளர் தினம் யாழ்ப்பாணத்தில் - அமைச்சின் செயலாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்...