பூநகரி ஒருங்கிணைப்புக்குழு கூட்ட எதிரொலி : மக்கள் பிரதிநிதிகளை அடக்கியாள முற்படுகின்றார் விஜயகலா என அதிகாரிகள் மற்றும் புத்திஜீவிகள் விசனம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/09/vijayakala.jpg)
பூநகரி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தனது செயற்பாடுகளை விமர்சித்தமைக்காக வன்னி மக்களின் பிரதிநிதியான சிறீதரன் M.Pயை குறித்த கூட்டத்தின் கதிரையில் அமர தகுதியில்லாதவர் என கூறியதுடன் ஏனைய வடக்கு மாகாண சபை உறுப்பினர்களையும் தரக்குறைவான முறையில் திட்டி தனது இயலாமையையும் செயற்றிறனின்மையையும் வெளிப்படுத்தியதுடன் கூட்டத்திலிருந்து இடைநடுவே வெளியேறிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் செயற்பாடானது பதவிக்கு தகுதியற்ற ஒருவரை அரசாங்கம் குறித்த பதவியில் அமர்த்தியுள்ளதாக கிளிநொச்சி பிரதேச புத்திஜிவிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
பூநகரி பிரதேச செயலகத்தில் ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின்போது மீள்குடியேற்றம், கல்வி, விவசாயம், வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் நேற்றையதினம் (03) ஆராயப்பட்டது.
குறித்த கூட்டத்தின் போது நீரியல் வளத்துறை உத்தியோகத்தர் ஒருவரை பதவியில் இருந்து வெளியேற்றப்போவதாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அச்சுறுத்தியதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வட மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன் குற்றஞ்சாட்டினார். இந்த விடயம் தொடர்பில் இராஜாங்க அமைச்சரின் இணைப்பாளர் வட மாகாண சபையின் உறுப்பினர்களான வை.தவநாதன் மற்றும் சு. பசுபதிப்பிள்ளை ஆகியோருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் இராஜாங்க அமைச்சர் விஜயகலாவும் மக்களால் அதிகளவு வாக்குகள் வழங்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் கீழ்த்தரமான முறையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக தனங்கிளப்பு பகுதி மீனவர்கள் தடைசெய்யப்பட்ட உபகரணங்களை கொண்டு தொழிலிலீடுபடுகின்றனர் என பலமுறை தெரிவித்திருந்த நிலையில் அதை கட்டுப்படுத்துவதற்காக சட்ட நடவடிக்கை மேற்கொண்டபோது அதற்கு இடையூறாக இருந்து துறை சார் அதிகாரி ஒருவரை மிரட்டியமை தொடர்பாக குறித்த உறுப்பினர்கள் கேட்டதற்கு தகுந்த பதில் வழங்காது மக்கள் பிரதிநிதிகளையே மிரட்டுமளவுக்கு நடந்துகொண்டதுடன் தனியார் காணி ஒன்று தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுடன் எழுந்த வாதப்பிரதிவாதங்களை அடுத்து, பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பதிலளிக்க முடியாது திணறிய விஜயகலா தன்னை சட்டநடவடிக்கைகளுக்கு உட்படுத்த முடியாது என்றும் அவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும். மிரட்டியதுடன் கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளார்
தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் சம்பந்தனதும் வழியொற்றியே தான் தனது அரசியல் நடவடிக்கைகளை பின்பற்றுவதாக தெரிவித்துவரும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா குறித்த கூட்டத்தில் தனது கருத்துக்கள் அவையில் ஏற்றுக்கொள்ளப்படாதிருந்த நிலையில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவையை அடக்க முற்பட்ட போதும் அது கைகூடாது போகவே வெளியேறியுள்ளார் என கூட்டத்தில் பங்குபற்றியிருந்த அதிகாரிகளும் புத்திஜீவிகளும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட பொது அமைப்பின் பிரதிநிதி ஒருவர் கருத்து தெரிவிக்கையில் வெறும் ஏழு வாக்குகளால் வெற்றிபெற்ற இராஜாங்க அமைச்சர் 70 ஆயிரம் வாக்குகளுக்கும் அதிகமாகன வாக்குகளை பெற்று வெற்றியீட்டிய ஒருவரை பார்த்து கதிரையில் இருக்க தகுதி இல்லை என்று கூறியிருப்பதானது அவரது வழமையான கோமாளித்தனமான பேச்சக்களில் ஒன்றாகவே உள்ளது என தெரிவித்தார்.
Related posts:
|
|