இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை வேண்டும் :யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன்

Wednesday, December 28th, 2016

இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை அனர்த்தங்களால் அநாவசியமான உயிரிழப்புகள்  ஏற்படுவதையும், உடைமைச் சேதம் ஏற்படுவதையும் தவிர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை(26) இடம்பெற்ற தேசிய பாதுகாப்புத் தின நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கடந்த-2004 ஆம் ஆண்டு  ஏற்பட்ட சுனாமி  அனர்த்தத்தினால் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. இலட்சக் கணக்கானோரின் உடமைகள் சேதமாக்கப்பட்டன. அந்தவகையில் இன்றைய தினத்தைத் தேசியப் பாதுகாப்புத் தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. ஆழிப் பேரலையினாலேயே எமது மாவட்டத்திலும் மூவாயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டிருந்தனர்.

இன்றைய தினம் சுனாமியால்  நாடு முழுவதும்  இறந்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தியுள்ளோம். அவர்களுடைய ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.சுனாமியின் பின்னரே எமது நாட்டில் விழிப்புணர்வு ஏற்பட்டது. அதன் பின்னரே தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையமும் ஸ்தாபிக்கப்பட்டது.தற்போது அனைத்து மாவட்டங்களிலும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் இயங்கி வருகிறது.

எமது மாவட்டத்தைப்  பொறுத்தவரை சுனாமியை விட வெள்ளம் வறட்சி ,மின்னல், புயல் போன்ற  இயற்கை அனர்த்தங்களாலேயே பொதுமக்கள் இழப்பு அதிகமாக  ஏற்படுகிறது.

எமது மாவட்டதில் சிறிதளவான மழைவீழ்ச்சிக்கு   கூடப் பெரும்பாலானோர் இடம்பெயர வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது. பின்னர் நிவாரணத்திற்காக அரசாங்கம் பெருமளவான நிதியினைச் செலவு செய்ய வேண்டி உள்ளது.

எமது மாவட்டதில் கடற்தொழிலிற்குச் செல்பவர்களின் இழப்பே அதிகமாகவுள்ளது. இந்த வருடத்தில் நான்கு மீனவர்கள் இறந்திருக்கிறார்கள். இவ்வாறான உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்கு அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

vethanayakan

Related posts: