உலகக் கிண்ணக் காற்பந்து – ஈராம் பங்கேற்கும் – FIFA பொதுச் செயலாளர்!

Sunday, May 17th, 2026

விசா தொடர்பான கவலைகள் காணப்பட்டபோதிலும், இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் காற்பந்து தொடரில் ஈரான் அணி நிச்சயமாகப் பங்கேற்கும் என சர்வதேச காற்பந்து சம்மேளனமான FIFA பொதுச் செயலாளர் மத்தியாஸ் கிராஃப்ஸ்ட்ரோம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஈரான் காற்பந்து சங்கத்தின் தலைவர் மெஹ்தி தாஜுடன் நடத்திய சந்திப்பு மிகவும் சாதகமாக அமைந்ததைத் தொடர்ந்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது ஊடகமொன்றிடம் கருத்து வெளியிட்ட FIFA பொதுச் செயலாளர், “ஈரான் காற்பந்து சங்கத்துடன் நாங்கள் மிகவும் ஆக்கப்பூர்வமான சந்திப்பொன்றை நடத்தியுள்ளோம்.

அவர்களுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதுடன், உலகக் கிண்ணத் தொடருக்கு அவர்களை வரவேற்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் நடைபெறவுள்ள குழுநிலை போட்டிகளில் ஈரான் அணி பங்கேற்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்திருந்தன.

அத்துடன், ஈரான் காற்பந்து சங்கத் தலைவர் மெஹ்தி தாஜிற்கு, இஸ்லாமிய புரட்சிகர காவல் படையுடன் (IRGC) தொடர்பு இருப்பதாகக் கூறி கனடாவுக்குள் நுழைவதற்கான விசா மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து விசா தொடர்பான சிக்கல்களும் உருவெடுத்தன.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த FIFA பொதுச் செயலாளர், “இது தொடர்பான அனைத்து விடயங்கள் குறித்தும் நாங்கள் கலந்துரையாடியுள்ளோம். ஆனால், அது பற்றிய விரிவான விபரங்களை இங்கு பேச வேண்டிய அவசியமில்லை.

ஒட்டுமொத்தமாக இந்தச் சந்திப்பு மிகவும் சாதகமாக அமைந்ததுடன், எங்களது கலந்துரையாடல்களைத் தொடர எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ணக் காற்பந்து தொடரின் தனது முதலாவது போட்டியில் ஈரான் அணி, எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதி நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: