95 ஒக்டென் பெற்றோல் நாளைமுதல் விநியோகிக்கப்படும் – வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர அறிவிப்பு!

Monday, May 23rd, 2022

95 ஒக்டென் பெற்றோலை நாளைமுதல் நாடு முழுவதும் பெற்றுக் கொள்ள முடியும் என்று வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

எனவே, 95 ஒக்டென் பெற்றோல் பாவனையாளர்கள், 92 ஒக்டென் பெற்றோலுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இரண்டு கப்பல்களில் இருந்து தரையிறக்கப்பட்டுள்ள பெற்றோல் இன்றுமுதல் நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இதனை, நாளைமுதல் பொதுமக்கள் பெற்றுக் கொள்ள முடியும். எதிர்வரும் ஆறு வாரங்களுக்கு போதுமான 95 ஒக்டென் பெற்றோல் கையிருப்பில் இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், அனுமதிப்பெற்ற எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தவிர்ந்த, 3ஆம் தரப்பினரிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறு வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.

குறித்த நபர்கள் எரிபொருளை சட்டவிரோதமாக களஞ்சியப்படுத்தி, அதனை ஏனைய திரவங்களுடன் கலந்து விற்பனை செய்வது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அவ்வாறான வர்த்தக நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டாம் என வலுசக்தி அமைச்சர் தமது ட்விட்டர் கணக்கின் ஊடாக பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், அவ்வாறான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறும் அவர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்த அரசியல் சமூக பொருளாதார மறுமலர்ச்சி-  பிரதமர் !
ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய எவருக்கும் ஜனாதிபதி மன்னிப்பு அளிக்கப் போவதில்லை - நீதி அமைச்சர் அ...
பிரசார பணிகளின் போது, வாக்காளருக்காக செலவிடக் கூடிய அதிகபட்ச தொகையை நிர்ணயித்து வெளியானது அதிவிசேட வ...