வீட்டுப் பணியாளர்களாகப் பணிபுரிபவர்களது நலன்கள் கருத்தில்கொள்ளப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Tuesday, September 17th, 2019

இந்த நாட்டைப் பொறுத்தவரையில் சுமார் 7 இலட்சம் பேர் உள்@ர் வீட்டுப் பணிகளில் ஈடபட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது. இதில் அதிகமானவர்கள் – அதாவது நூற்றுக்கு 75 சத வீமானவர்கள் தமிழ் மக்களாகவும், நூற்றுக்கு 15 வீதமானோர் முஸ்லிம் மக்களாகவும், ஏனைய 10 வீதமானோர் சிங்கள மக்களாகவும் உள்ளதாகப் புள்ளி விபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற சிரம வாசனா எனப்படுகின்ற உழைப்பு அதிஸ்ட நிதியம், சம்பளச் சபைகள் திருத்தச் சட்டமூலம் மற்றும் தொழிற்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழான கட்டளைகள் என்பன தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

வீட்டுப் பணியாளர்களைப் பொறுத்த வரையில் சுமார் 80 வீதமானவர்கள் பெண்களாகவே இருக்கின்றனர். 18 வயது முதற் கொண்டு 72 வயது வரையிலானவர்கள்  இத்தகைய வீட்டுப் பணியாளர்களாகப் பணிபுரிந்து வருவதுடன், அதிகமாக 30 வயதிற்கும் 45 வயதிற்கும் இடைப்பட்டவர்களே இப்பணிகளில் ஈடுபட்டு வருகின்ற நிலைமை காணப்படுகின்றது.

இந்தப் பணியாளர்களும் தங்களது தொழில் சார்ந்த பாதுகாப்புகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே பணியாற்றி வருகின்றனர். அத்துடன் பல்வேறு பிரச்சினைகளுக்கு நாளாந்தம் முகங்கொடுக்கின்றவர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.      

தற்போது வீட்டுப் பணியாளர்களுக்கெனவும் சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அச்சங்கமானது வீட்டுப் பணியாளர்களது உரிமைகள் தொடர்பில் அதிகளவு அக்கறை கொண்டு செயற்பட்டு வருகின்ற போதிலும், அச் சங்கத்தின் கோரிக்கைகள் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் அந்தளவு அக்கறை காட்டுவதாக இல்லை என்றே தெரிய வருகின்றது.

எனவே, இத்தகைய தொழிலாளர்கள் அனைவரதும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய வகையிலான திருத்தங்களைச் சட்டங்களில் மேற்கொள்வதுடன், அவற்றை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கும், மீறுமிடத்து சட்ட ரீதியிலான தண்டனைகளுக்கு உட்படுத்துவதற்கும் கடுமையான ஏற்பாடுகள் தேவை என்பதை வலியுறுத்திதுகின்றேன்.

Related posts: