சம்பந்தனும் சுமந்திரனும் தமிழ் மக்களுக்கு பொய் கூறுகின்றனர்- சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆவேசம்!

Thursday, December 29th, 2016

எங்களை ஏமாற்றக் கொழும்பு முயன்றால் அரசை முடக்கும் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனப் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிடுகிறார். அவ்வாறெனில் அரசாங்கம் இதுவரை என்ன செய்து கொண்டிருக்கிறது என அவர் கருதுகிறார் என கேள்வி எழுப்பியுள்ளார் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று புதன்கிழமை(28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் –

பாராளுமன்றம் அமைத்திருக்கின்ற அரசியல் சாசன மாற்றத்திற்கான 22 பேர் கொண்ட வழிகாட்டல் குழுவில் சம்பந்தன் , சுமந்திரன் ஆகிய கூட்டமைப்பைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களும் அங்கம் வகிக்கிறார்கள். அவர்கள் இரண்டு பேரும் வழிகாட்டல் குழுவின் மூலமாகச் சமஸ்டி அரசியல் அமைப்பு முறைமை வேண்டுமென்றோ இல்லாவிடில் வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டுமென்றோ எந்தவித  கோரிக்கைகளையும் இதுவரை முன்வைக்கவில்லை. அப்படியானால் அவர்கள் அதில் ஏன் இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்கின்றனர்.

சுமந்திரன் வடகிழக்கு இணைக்கப்பட மாட்டாது எனக் கூறியிருப்பதும் ஜனாதிபதி, பிரதமர், ஐக்கியதேசியக் கட்சி மற்றும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றின் உயர்மட்டக் குழு, ஜே.வி.பி. என்பன  ஒற்றையாட்சியில்லை, பெளத்தத்திற்கு முன்னுரிமை, வட- கிழக்கு இணைக்கப்படப் போவதில்லை எனச் சொல்வதும் பொய்யா? அவ்வாறெனில் சம்பந்தன் சுமத்தினர் ஆகிய இருவரும்  கூறிவருவது என்ன?

தமிழ் மக்களது அடிப்படைக் கொள்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இது வெளிப்படுத்தும்போது தொடர்ந்தும் ஏன் வழிகாட்டல் குழுவிலிருந்து இவர்கள் இருவரும் வெளியெறாமல் உள்ளனர் எனவும் கேள்வி எழுபிய அவர் இதுவரை 40 கூட்டங்கள் நடைபெற்ற நிலையில் தமிழ் மக்களது அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் இதுவரை ஏன் பேசப்படவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மையில் என்னுடைய கட்சி சார்பாகக் கட்சியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் சம்பந்தனுக்கு ஒரு கடிதமொன்றை அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தில் உடனடியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழு கூட்டப்பட்டு ஒற்றையாட்சி, பெளத்தத்திற்கு முன்னுரிமை ஆகிய விடயங்கள் குறித்துப் பேச வேண்டும்.  மக்களின் ஆணைக்கேற்ப சரியான முடிவுகள் எட்டப்பட வேண்டும் எனக் கேட்கப்பட்டிருந்தது. ஆனால், இன்றுவரை இதற்கான எந்தவித முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்படவில்லை என்றார்.

unnamed (1)

Related posts:

நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதில்லை என்றால் அது தொடர்பில் கடன் தகவல் பணியகத்தில் அறிவிக்குமாறு பொது ...
இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்ற இயலாவிடின் பட்டமளிப்பைப் பிற்போடுங்கள் - துணைவேந்தருக்கு சுகாதார சே...
ஜூன் 7 ஆம் திகதிவரை பயணக் கட்டுப்பாடுகள் நீடிப்பு – அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய 2 நாட்களுக்...