பொதுமக்களுக்கு கண் மருத்துவ நிபுணர் மலரவன் விடுத்துள்ள அறிவுறுத்து!

Sunday, August 23rd, 2026


…….
மத விழாக்கள் மற்றும் ஊர்வலங்களின்போது பயன்படும் அதிக ஒளி பிரகாசம் கொண்ட விளக்குகள், எல்.இ.டி மின்குமிழ்கள், லேசர் கதிர்கள் மற்றும் பட்டாசுகள் காரணமாக கண்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் விசேட கண் மருத்துவ நிபுணர் எஸ். மலரவன் அறிவுறுத்தியுள்ளார்.

அதிக தீவிரம் கொண்ட பிரகாசமான விளக்குகள், லேசர் கதிர்கள் மற்றும் பட்டாசுகளை நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்க்குமாறும், குழந்தைகளை அதிக ஒளி மற்றும் பட்டாசுகள் வெடிக்கும் இடங்களுக்கு அருகில் அனுமதிக்காமல் பாதுகாப்பான தூரத்தில் வைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் விழா ஏற்பாட்டாளர்கள் பிரகாசமான விளக்குகளைப் பொதுமக்களின் கண்களுக்கு நேராகப் படாதவாறு அமைக்க வேண்டும் என்றும், சேதமடைந்த அல்லது விரிசல் ஏற்பட்ட விளக்குகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சமீபத்தில் கண் அறுவைச் சிகிச்சை செய்தவர்கள், விழித்திரை நோய் உள்ளவர்கள் மற்றும் கடுமையான கண் வறட்சியால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட நேரம் அதிக ஒளியில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கண்களில் காயம் ஏற்பட்டால் அல்லது திடீரென பார்வை மங்குதல், பார்வை குறைதல், கடுமையான கண் வலி, தொடர்ந்து கண் சிவத்தல், ஒளியைப் பார்க்க முடியாத நிலை மற்றும் கண் முன்னே ஒளிப்பொறிகள் அல்லது கரும்புள்ளிகள் தோன்றுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் விழாக்களில் மகிழ்ச்சியுடன் கலந்துகொள்ளும் அதேவேளையில் தமது கண்களின் பாதுகாப்பிலும் அதிக கவனம் செலுத்தி, விழிப்புணர்வுடன் செயல்படுமாறு விசேட கண் மருத்துவ நிபுணர் எஸ். மலரவன் மீண்டும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: