1 பில்லியன் டொலர் வெளிநாட்டு பணப்பரிமாற்ற மோசடி – நான்கு  முகாமையாளர்கள் கைது!

Tuesday, August 18th, 2026

இலங்கையில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குக் கடத்திய சம்பவம் தொடர்பாக, நாட்டின் நான்கு முன்னணி தனியார் வங்கிகளின் நான்கு முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் வங்கி அதிகாரிகள் இவ்வாறானதொரு சம்பவத்துக்காகக் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதியியல் குற்ற விசாரணைப் பிரிவினர் (FCID) இந்த வங்கி அதிகாரிகளை அவர்கள் பணிபுரியும் வங்கி வளாகங்களிலேயே வைத்து கைது செய்துள்ளனர்.

கொழும்பு, கோட்டை பகுதியில் இயங்கும் பணமாற்று முகவர் ஒருவர், இலங்கைக்கு எந்தவிதமான பொருட்களையும் இறக்குமதி செய்யாமல், பல வங்கி வழிகளைப் பயன்படுத்தி, 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த மோசடியை முன்னெடுத்த பிரதான நபர், கைது செய்யப்பட்ட நான்கு வங்கி அதிகாரிகளுக்கும் வாராந்தம் லஞ்சப் பணம் வழங்கி வந்துள்ளார்.
விசாரணைகளின்படி, இவர்களுக்கு வாரத்துக்கு 30,000 ரூபாய், 50,000 ரூபாய் மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் வீதம் பணம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு வங்கி மேலாளருக்கு ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் மட்டும் சுமார் 10 இலட்சம் ரூபாய் வரை பணம் வழங்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பாரிய நிதி மோசடி தொடர்பாக நிதியியல் குற்ற விசாரணை பிரிவினர் (FCID) மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

000

Related posts: