புதிய புத்தகங்கள் காகிதக் கூழாக இந்தியாவிற்கு ஏற்றுமதி –  பொலிசார்  விசாரணை!

Saturday, August 15th, 2026



கிழக்கு மாகாணத்தில் உள்ள முதலாம் தர தமிழ் மொழி மூல மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட, சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான 19,892 பாடநூல்கள் மற்றும் பயிற்சிப் புத்தகங்கள் விநியோக மையங்களுக்குச் சென்றடையாமல் பழைய பேப்பர் வாங்குபவருக்கு விற்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பியகம பகுதியில் வைத்து புத்தகங்களை விநியோகத்திற்காகப் பொறுப்பேற்ற பாரவூர்தி சாரதி ஒருவர், அவற்றை விநியோகிக்காமல் தனது வீட்டில் சேமித்து வைத்து, பின்னர் பழைய பேப்பர் சேகரிப்பாளரிடம் 1,600 கிலோகிராம் எடைக்கு ரூ. 47,000-க்கு விற்றுள்ளார்.

அவ்வாறு வாங்கப்பட்ட புத்தகங்கள் பேலியகொட பகுதியில் உள்ள காகிதங்களை அரைக்கும் நிறுவனத்திற்கு விற்கப்பட்டு, அரைக்கப்பட்ட பின்னர் சில நாட்களில் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கல்வி வெளியீட்டுத் திணைக்களம் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் தலங்கம காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு, 31 வயதுடைய சந்தேகநபரான பாரவூர்தி சாரதியைக் கைது செய்துள்ளனர்.

அவர் கடுவலை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
00

Related posts: