யாழ்ப்பாணத்தில் ஆகஸ்ட் நடுப்பகுதியில் சர்வதேச சைவ மாநாடு!

Thursday, August 6th, 2026


……
தமிழரின் ஆன்மிக மரபையும் பண்பாட்டு அடையாளத்தையும் பிரதிபலிக்கும் சைவ நெறி மற்றும் தமிழ் மொழியைப் பாதுகாக்கும் நோக்கில், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சர்வதேச சைவ மாநாடு நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

குறித்த மாநாடு யாழ்ப்பாணம் நல்லூர் சட்டநாதர் வீதியில் உள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் காலை 7 மணிமுதல்  இரவு 9 மணிவரை இடம்பெறவுள்ளதாகவும் குறித்த நிகழ்வின் ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.

யாழ் ஊடக அமையத்தில் இன்று (6) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் இதனை அறிவித்த ஏற்பாட்டுக் குழுவினர், நீண்டகால யுத்தம், கட்டாய இடப்பெயர்வு மற்றும் புலம்பெயர்வு ஆகிய காரணங்களால் சமூகத்தின் சமய விழுமியங்களும் வாழ்வியல் பெறுமதிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

தற்போதைய சமூகச் சூழலில் நம்பிக்கையின்மை, போதைப்பொருள் பாவனை, ஊழல் மற்றும் பல்வேறு துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வரும் நிலையில், மக்களை இத்தகைய சிக்கல்களிலிருந்து மீட்டெடுத்து ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்துவதே மாநாட்டின் பிரதான நோக்கமாகும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும், பல்வேறு கோவில்கள் கட்டப்பட்டு வந்தாலும், சைவத்தின் அடிப்படைத் தத்துவங்களும் பண்பாட்டு விழுமியங்களும் இளைய தலைமுறையினரிடையே மங்கிவரும் நிலை காணப்படுவதாகவும், உண்மையான ஆன்மிக வாழ்வியலை வலுப்படுத்தி சமூக மறுமலர்ச்சியை உருவாக்குவதே மாநாட்டின் இலக்காக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

மாநாட்டை வெற்றிகரமாக நடத்த அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம் எனக் குறிப்பிட்ட ஏற்பாட்டுக் குழுவினர், அறிஞர்கள், சமயப் பெரியோர்கள் மற்றும் பல்துறை நிபுணர்கள் தங்களது ஆலோசனைகள் மற்றும் ஆசிச் செய்திகளை வழங்குமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.

அதேவேளை, மாநாட்டு ஏற்பாடுகளை சிறப்பாக முன்னெடுக்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வாழும் நல்லுள்ளங்கள் தாராளமாக நிதியுதவி வழங்கி இந்த முயற்சியில் பங்கெடுக்குமாறும் ஏற்பாட்டுக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
0000

Related posts: