அஸ்வெசும நிதியில் 29 இலட்சத்து 89,500 ரூபாய் மோசடி – பிரதேச செயலக இரு பெண் அதிகாரிகள் கைது!
Saturday, August 1st, 2026
……
அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் நிதி மோசடி தொடர்பில், நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய இரு பெண் அதிகாரிகள், ஹட்டன் விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (31) மாலை சுமார் 4.45 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கைது நடவடிக்கை, பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளில் முறைகேடுகள் இடம்பெற்றதாகப் பெறப்பட்ட பல்வேறு முறைப்பாடுகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நோர்வூட் பிரதேச செயலக அதிகாரிகள் சிலருக்கு எதிராக தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைத்து வந்த நிலையில், மாவட்டச் செயலாளரின் நேரடி அறிவுறுத்தலின்படி உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், குறித்த இரு அதிகாரிகளும் தற்காலிகமாக வேறு பிரதேச செயலகங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.
அதன்படி, ஒருவரை அம்பகமுவ பிரதேச செயலகத்துக்கும், மற்றொருவரை தலவாக்கலை பிரதேச செயலகத்துக்கும் பணியமர்த்தியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, நோர்வூட் பிரதேச செயலாளரால் ஹட்டன் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் உத்தியோகபூர்வ முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 33 மற்றும் 30 வயதுடைய இரு பெண் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, 2025ஆம் ஆண்டு முதல் இதுவரை அஸ்வெசும நிதியில் இருந்து சுமார் 29 இலட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாய் மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
000
Related posts:
|
|
|


