வலி வடக்கில் காணி விடுவிப்பு முடங்கியமைக்கு தென்னிலங்கைக்கு உண்மைகள் கொண்டு செல்லப்படாமையே காரணம் – டக்ளஸ் தேவானந்தா!
Monday, July 27th, 2026
…….
எமது மக்களின் அபிலாசைகளை சார்ந்து சிந்தித்து, உண்மைகளை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படாமையே, கடந்த இரண்டு வருடங்களாக வலி வடக்கில் காணிகள் எவையும் விடுவிக்கப்படாமைக்கு காரணம் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இதனாலேயே மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டங்களுக்கு எமது கட்சி ஆதரவளித்து என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வலி வடக்கு பிரதேசத்திற்கான வட்டாரக்குழு உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இச்சந்திப்பில் வலி வடக்கில் கட்சியின் செயற்பாடுகளை மேலும் விஸ்தரிப்பது, மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் போராட்டங்களுக்கும் தார்மீக ஆதரவைத் தெரிவிப்பது மற்றும் சமகால அரசியல் நிலைவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.
இதேநேரம் வலி வடக்கில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் எமது காலப்பகுதியில் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. உயர் பாதுகாப்பு வலயம் என்ற அடிப்படையில் பல ஆண்டுகளாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த காணிகளை விடுவிப்பதற்கு இராணுவத்தினர் விரும்பியிருக்கவில்லை. அதேபோன்று அரசாங்கத்தில் அங்கம் வகித்திருந்த சிலரின் தூரப்பார்வையின்மையும் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்குச் சார்பானதாக இருக்கவில்லை.
மயிலே மயிலே இறகு போடு என்றால் மயில் இறகு போடாது. ஒரு விடயம் நிறைவேற்றப்பட வேண்டுமானால், குறித்த விடயம் தொடர்ச்சியாக தென்னிலங்கையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.
அக்காலப்பகுதியில் எமக்கான அரசியல் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டளவில் மாத்திரம் இருந்தபோதிலும், மக்களின் நியாயமான கோரிக்கைகளையும் அபிலாசைகளையும், உண்மை நிலைவரங்களையும் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையின் கவனத்திற்குத் தொடர்ச்சியாக எடுத்துச் சென்றோம்.
இதன் மூலம் காணிகள் விடுவிக்கப்பட வேண்டிய தர்மசங்கடமான சூழலை ஜனாதிபதிக்கும் முக்கிய அமைச்சர்களுக்கும் ஏற்படுத்தினோம்.
அதன் அடிப்படையில் படிப்படியாக கணிசமான காணிகள் விடுவிக்கப்பட்டன. அதுதான் எங்களுடைய அரசியல் அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றிகளாகும்.
ஆனால் தற்போதைய அரசாங்கத்தில் எமது மக்களின் பிரதிநிதிகளாக இடம்பிடித்திருப்பவர்களுக்கு உயர் பாதுகாப்பு வலயம் மற்றும் மக்களின் தனியார் காணிகள் பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ளமை தொடர்பாகப் போதிய புரிதலும் இல்லை. அதுமட்டுமல்லாது மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற உணர்வுபூர்வமான அக்கறையும் இல்லை.
இதனால் காணி விடுவிப்பு போன்ற எமது மக்களின் உணர்வுகள் தொடர்பாக உண்மையான தகவல்களோ அழுத்தங்களோ தற்போது தென்னிலங்கைக்கு எடுத்துச் செல்லப்படவில்லை.
இதன் காரணமாகவே காணிகள் எவையும் விடுவிக்கப்படவில்லை. இந்நிலையிலேயே, வேறுவழியின்றி மக்கள் தொடர்ச்சியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை மக்களின் நிலைப்பாட்டில் நியாயம் இருப்பதனால், அதற்கான தார்மீக ஆதரவை வழங்கும் வகையிலேயே மக்களினால் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களில் எமது கட்சி பங்குபற்றி வருகின்றது – என்றார்.
குறித்த சந்திப்பின்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், ஊடக செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந்த், குறித்த பிரதேசத்தின் நிர்வாக செயளாளர் ஜெயபாலசிங்கம் அன்பு, மேலதிக நிர்வாக செயலாளர் ஸ்ரீகரன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.




000
Related posts:
|
|
|


