அதிகரிக்கும் டெங்கு நோய் –  துரித நடவடிக்கை எடுக்குமாறு பொலிசார்  அறிவுறுத்து!

Saturday, July 18th, 2026


……
நாட்டில் டெங்கு நோயின் பரவல் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதால், பொது மக்கள் தமது குடியிருப்புகளைச் சூழ நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்றத் துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிசார்  அறிவுறுத்தியுள்ளனர்.

சுகாதார அமைச்சு, பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் காவல்துறை இணைந்து நாடு தழுவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

அனைத்து காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிரமாகக் கவனம் செலுத்துமாறு காவல்துறை மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் 48 காவல்துறை பிரிவுகளில் அமைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பாதுகாப்பு குழுக்கள் மூலம், டெங்கு ஒழிப்பு சிரமதானங்கள், விழிப்புணர்வுப் பணிகள் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

தமது இடங்களில் நுளம்புகள் பெருகும் வகையில் சுற்றுச்சூழலை அசுத்தமாக வைத்திருப்பவர்களுக்கு எதிராக தண்டனைச் சட்டக் கோவையின் 262 ஆவது பிரிவின் கீழ் வழக்குத் தொடரப்படும் எனவும் காவல்துறை அறிவித்துள்ளது.

2007 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நுளம்புகள் பெருகுவதைத் தடுக்கும் சட்டத்தின் கீழ், சுகாதார அதிகாரிகள் ‘சிவப்பு அறிவித்தல்களை’ வழங்க அதிகாரம் கொண்டுள்ளனர்.

இந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால், 25,000 ரூபா வரை அபராதம் விதிக்கப்படலாம் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.

இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில், நுளம்புகள் பெருகும் இடங்களை வைத்திருந்தமைக்காக 4,672 பேருக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் குடும்பங்களுக்கும் சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்துகின்றன என்பதை வலியுறுத்தியுள்ள காவல்துறை, தமது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொண்டு, இந்த உயிரிழப்புகளைத் தடுக்குமாறு பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களை கோரியுள்ளது.

000

Related posts: