இலங்கை எதிர்கொள்ளும் உள்நாட்டு வெளிநாட்டு சவால்கள், அரசியல், சமூக பொருளாதார சீர்திருத்தங்களை செயற்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது – நியூயோர்க்கில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Sunday, September 25th, 2022

இலங்கை எதிர்கொள்ளும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சவால்கள், அரசியல், சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை செயற்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77 ஆவது அமர்வில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செயற்பாடு இலங்கை மக்களின் மீட்சி மற்றும் செழிப்புக்கு வழிவகுக்கும் எனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய அரசாங்கம் நிதி ஒழுக்கம், பொருளாதார மற்றும் நிர்வாக சீர்திருத்தம் விடயத்தில் அர்ப்பணிப்புடன் உள்ளது.

அத்துடன் கருத்து சுதந்திரத்தை அங்கீகரிக்கும் அதேவேளையில் அது அரசியலமைப்பின் வரம்புகளுக்குள் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

இதனிடையே இலங்கை உள்ளிட்ட வேறு எந்த நாடுகளினாலும் சவால்களை தனியாக சமாளிக்க முடியாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று மற்றும் ஏனைய விடயங்களினால் ஏற்பட்ட நெருக்கடிகளால் வளரும் நாடுகளும் அவற்றின் பொருளாதாரங்களும் கடுமையான ஆபத்தில் உள்ளதாக கூறியுள்ளார்.

போதுமான மூலதனத்திற்கான அணுகல் இல்லாததால் வறுமை, வேலையின்மை மற்றும் பட்டினி ஆகியவற்றை மக்கள் எதிர்கொள்வதாகவும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கடந்த ஐ.நா. பொதுச் சபைக்குப் பின்னர் இலங்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

நிலையான மற்றும் வளமான எதிர்காலத்தை கட்டியெழுப்ப ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பும் ஆதரவும் அவசியம் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0000

Related posts: