குளத்தை கலக்கி மீன் பிடிக்க துடிக்கின்றன சில ஊடகங்கள் – அமைச்சர் டக்ளஸ் காட்டம்!

Monday, January 4th, 2021

மாகாணசபை முறைமையினை நீக்குவது தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் யாருமே கருத்துக்களை முன்வைக்கவில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான காலச் சூழல் பற்றிக் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளை தீராப் பிரச்சினைகளாக வைத்திருந்து தம்மை வளப்படுத்திக் கொள்ள முயற்சிக்கும் சில தமிழ் ஊடகங்களே உண்மைக்கு பறம்பான செய்திகளையும் பூதாகரமாக்கிய செய்திகளையும் வெளியிட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

தனியார் ஊடகம் ஒன்றின் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

“பெரும்பான்மை மக்களின் ஆதரவினால் உருவாக்கப்பட்டுள்ள தற்போதைய அரசாங்கத்தில் பல்வேறு கருத்துக்களை கொண்டோர் இருக்கின்றார்கள்

 ஒவ்வொருவரும் தமது அரசியல் ரீதியான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆனால், மாகாண சபை முறை தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் வெளியாகின்ற போதிலும், அதனை இல்லாமல் செய்வது தொடர்பாக அரசாங்கத்திற்கு எந்த திட்டமும் இதுவரை இல்லை.

அண்மையில் அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டம் இடம்பெற்றது. அதில் மாகாண சபை முறைமைக்கு எதிரான அரசியல் கருத்துக்களை கொண்டோரும் இருந்தனர். குறித்த கூட்டத்தில் மாகாணசபை தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆராயப்பட்டது.

இதன்போது, குறித்த தேர்தலை நடத்துவதற்கான காலச்சூழல் பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டதே தவிர, மாகாணசபை முறையை நீக்கக்கூடாது என்று யாரும் கூறவே இல்லை.

ஆனால், சில தமிழ் ஊடகங்கள் தமிழ் மக்கள் மத்தியில் மாகாண சபை தொடர்பான நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும் நோக்கில், எந்த விதமான சமூக அக்கறையும் இன்றி மாகாணசபைக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டோரின் தகவல்களை வெளியிட்டு வருகின்றன.” என்று தெரிவித்தார்.

மேலும், தமிழ் மக்கள் மத்தியில் மாகாண சபை தொடர்பான நம்பிக்கையீனத்தை உருவாக்க முயலுகின்ற ஊடகங்களிடம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பது தொடர்பான எந்தவிதமான திட்டங்கள் இல்லையெனவும் குளத்தை கலக்கி மீன்பிடிக்கும் சுயலாப சிந்தனைகளே இருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தற்துணிவுகளின் அடிப்படையில் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து நாம் வெற்றி கண்டுள்ளோம் - செயலாளர் ...
சுற்றுவட்டம், சமிக்ஞை விளக்கு அமைப்பதுது தாமதமாகலாம் - பொலிஸார் இராணுவம் இணைந்து உடனடி போக்குவரத்து ...
அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெறும் ஜூலை மாதத்துக்கான யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!