கரைவலை தொழிலில் ‘வின்ஞ்’ பயன்படுத்து தொடர்பில் விஷேட குழு ஆராய்ந்து பரிந்துரைக்கும் – சங்கப் பிரதிநிதிகளிடம் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, September 9th, 2020

கரைவலைத் தொழிலில் ‘வின்ஞ்’ எனப்படும் சுழலி இயந்திரம் மற்றும் இயந்திம் பொருத்தப்பட்ட படகு போன்ற நவீன உபகரணங்கள் பயன்படுத்தப்படுவது தொடர்பில் விசேட குழு ஆராய்ந்து சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் இறுதித் தீரமானம் மேற்கொள்ளப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பாரம்பரியமாக கரைவலைத் தொழிலில் ஈடுபட்டுவருவோர் எதிர்கொண்டுவரும் பல்வேறு நடைமுறைப் பிரச்சனைகள் தொடர்பில் மட்டுப்படுத்தப்பட்ட அகில இலங்கை கரைவலை கூட்டுறவு சங்கப்பிரதிநிதிகள் இன்று(09.09.2020) கடற்றொழில் அமைச்சரைக் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் நாடு தழுவிய ரீதியில் கரைவலை தொழிலில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்கள், தமது அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்துக் கொள்வதில் எதிர்கொள்ளும் தாமதங்கள், புதியவர்களுக்கு அனுமதிகள் வழங்கப்படுவதால் தொழிலாளர்களுக்கிடையே ஏற்படுகின்ற இட நெருக்கடிகள், பாரம்பரியமாக இடுப்பில் கயிறுகட்டி வலையை இழுக்க தொழிலாளர்கள் முன்வராமை காரணமாக சுழலி இயந்திரங்களை பயன்படுத்த வேண்டிய நிலைமை காணப்படுவதால் அவற்றுக்கான சட்ட ரீதியாக அனுமதிக்கக் கோருவது, வலைகளை சுமந்து செல்லும் வள்ளங்களுக்கு இயந்திரங்களைப் பயன்படுத்த அனுமதி கோருவது மற்றும் தொழிலாளர்களுக்கு ஓய்வு மண்டபங்கள், போக்குவரத்து வீதிகள் அமைத்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக சங்கப் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்தனர்.

குறித்த கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், கரைவலைத் தொழில் அனுமதிகள் தொடர்பில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் பற்றி ஆராய்ந்து உரிய தீர்வினை வழங்குவதுடன் அதுதொடர்பான அறிக்கை ஒன்றினை தனக்கு சமர்ப்பிக்குமாறு கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.

அத்துடன், சுழலி இயந்திரங்களை பயன்படுத்தி கரைவலை இழுப்பதையும், கரைவலைத் தொழிலுக்கு இயந்திரப் படகுகளைப் பயன்படுத்துவதையும் ஆராய்ந்து அதனால் ஏனைய சிறு தொழிலாளர்கள் மற்றும் கடல் வளம் பாதிப்படையுமா? என்பதையும் ஆராய்ந்து பொருத்தமான தீர்மானமொன்றை எடுப்பதற்கு வசதியாக தொடர்புபட்ட துறைசார் பிரதிநிதிகளை உள்ளடக்கிய விஷேட குழுவொன்றை உடனடியாக நியமித்து அறிக்கையை பெற்றுக்கொண்ட பின்னர் அவற்றைப் பயன்படுத்துவது தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் சங்கப்பிரதிநிதிகளிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

Related posts:

தமிழர் உரிமைக்காக உயிர் நீத்த அனைவரது தியாகங்களும் ஈடேறவேண்டும் - முள்ளிவாய்க்காலில் டக்ளஸ் தேவானந்த...
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட கலந்த...
கச்சதீவைப் பெற்றதால் பல மடங்கு கடல் விளை நிலங்களை இழந்து விட்டோம் - தமிழ் அரசியல்வாதிகளின் அழுத்தம் ...

ஆள நினைக்கும் தரப்பினருக்கு துணையாக இருக்கும் தரப்பினர் வாழ நினைக்கும் மக்களுக்கு வினையாக இருக்கக் க...
அமைச்சர் டக்ளஸின் கௌதாரிமுனை விஜயத்தின் எதிரொலி - பூநகரி கௌதாரிமுனை நாளாந்த பேருந்து சேவை அதிகரிப்பு...
ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்தில் பச்சிலைப்பள்ளி எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் வருமானம் மூன்று இலட்சம...