போதனா மருத்துவமனையிலிருந்து சிசுவை விற்க உடந்தையான இருவருக்கு விளக்கமறியல்!

Sunday, May 6th, 2018

பிறந்து மூன்று நாள்களேயான சிசுவை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரில் தாயார் பிணையில் விடுவிக்கப்பட்டார். ஏனைய இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்று நேற்று உத்தரவிட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இளம்பெண் முறையற்ற தொடர்பு காரணமாக கர்ப்பமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிசுவொன்றை பிரசவித்துள்ளார்.

இந்த விடயம் பெண்ணின் வீட்டுக்குத் தெரியாததால் பிறந்து மூன்றே நாள்களேயான சிசுவை மருத்துவமனையில் நோயாளரைப் பராமரிக்கும் பணியில் ஈடுபடுகின்ற பெண்ணொருவர் மூலமாக இரகசியமாக கை மாற்ற முற்பட்டுள்ளார். பின்னர் வேறு பெண் ஊடாகச் சிசுவைக் கைமாற்றியுள்ளனர். எனினும் சிசு அங்கு இரண்டு மாத காலங்கள் இருந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு தொலைபேசி தகவல் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் மூலமாக யாழ்ப்பாண சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டு பொலிஸாரால் குழந்தை மீட்கப்பட்டது. விசாரணையில் குழந்தையின் தாயார் குழந்தையை விற்பனை செய்வதற்கு உதவிய பராமரிப்பாளர் மற்றும் குழந்தையின் தந்தை ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். விசாரணையின் பின்னர் அவர்கள் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கு யாழ்ப்பாண மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. விசாரணைகளின் பின்னர் குழந்தையையும் தாயாரையும் நம்பிக்கை இல்லத்தில் சேர்ப்பிக்குமாறு சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தருக்கு உத்தரவிட்ட நீதிவான், ஏனைய இருவரையும் 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Related posts:


ஆசிரியர் சம்பள முரண்பாடுகளை தீர்க்க நாட்டில் போதுமான நிதி பலம் இல்லை - பாதீட்டினூடாக தீர்வு காண நடவ...
பொருளாதார நெருக்கடியால் பாடசாலையில் இருந்து மாணவர்கள் இடைவிலகும் அபாயம் – எச்சரிக்கும் கல்வியாளர்கள்...
சட்டவிரோதமான முறையில் பெறப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டத்தை கொண்டுவருவதற்கு அமைச்சரவை ஒப்...