வட்டுக்கோட்டை வயல் கிணற்றினுள் பெருமளவு ஆயுதங்கள் கண்டுபிடிப்பு!

Wednesday, January 31st, 2018

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள வயல் காணிக் கிணறு ஒன்றில் இருந்து பெருமளவு ஆயதங்கள் நேற்றுக் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வட்டுக்கோட்டையில் இருந்து யாழ்;ப்பாணம் நோக்கிச் செல்லும் வீதியில் யாழ்ப்பாணத் தொழில்நுட்பக் கல்லூரிக்கு அண்மையில் உள்ள வயற் காணியில் இவ்வாறு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று மாலை அந்த வயல் காணியில் உள்ள கிணற்றில் இருந்து வயலுக்கு நீர் நிறைத்துக் கொண்டிருந்த போது தண்ணீர் வற்றியதால் கிணற்றுக்குள் இருந்த ஆயுதங்கள் வெளிப்பட்டுள்ளன.

இது தொடர்பாக வயல் உரிமையாளர் வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கினார். இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு தகவல் வழங்கினர்.

இதனை அடுத்து பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து கிணற்றுக்குள் இருந்த ஆயுதங்களை மீட்டனர்.

இவற்றில் ரி – 56 ரகத் துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் ரவைகள் ஒரு தொகை, 60 மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகள், ஆர்.பி.ஜி.குண்டு, ரொக்கெட் லோஞ்சா வகை சார்ந்த குண்டுகள் என்பன மீட்கப்பட்டதாகப் பொலிஸார் கூறினர்.

மீட்கப்பட்ட ஆயுதங்களில் பல பழையனவாகவும் சில புதியனவாகவும் காணப்பட்டதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பாக விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts:

புதிதாக ஆட்சியமைக்கின்ற அரசாங்கம் வேலைத்திட்டங்களை மாற்றினால் மீண்டும் நெருக்கடி - IMF எச்சரிக்கை !
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - அரசாங்கமே முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும் என ப...
யாழ்ப்பாண பொது நூல் நிலையம் புதுப்பொலிவுடன் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறது அறிவுப்பொக்கிஷம்!