அழுத்தங்கள் இல்லையேல் தென்னிலங்கை தமிழ் மக்களின் அபிலாசைகளை கண்டுகொள்ளாது – ஈ.பி.டி.பி. ஸ்ரீகாந்

Sunday, August 23rd, 2026


~~~

எம்மத்தியில் காணப்படுகின்ற வேறுபாடுளை களைந்து அனைத்து தரப்பினரும் அணிதிரண்டு காணிகளை விடுவிப்பதற்கான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம்,

அழுத்தங்கள் இல்லையாயின் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் எதனையும் தென்னிலங்கை அளுந் தரப்புக்கள் கண்டு கொள்ளாது என்ற அனுபவத்தின் அடிப்படையிலேயே காணி விடுவிப்பு தொடர்பான மக்கள் போராட்டங்களில் ஈ.பி.டி.பி. கலந்து கொண்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.

வசாவிளானில் இன்று(23.08.2026) நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போது குறித்த விடயத்தினை வலியுறுத்திய ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“மக்களின் காணிகள் மக்களிடம் கையளிக்கப்படும் என்ற கோசத்தினை முன்வைத்து எமது மக்களின் வாக்குகளை அபகரித்துக் கொண்ட தற்போதைய அரசாங்கம் அதுதொடர்பாக இரண்டு வருடங்களாகியும் எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

தங்களுடைய அரசியல் நிகழ்ச்சி நிரலான நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கு பல்வேறு எதிர்ப்புக்களையும் பொருட்படுத்தாமல் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்டு 22 ஆவது அரசியலமைப்பு திருத்திற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்ற தற்போதைய ஜனாதிபதியும் அரசாங்கமும், தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவதற்கு போதிய அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை. இது தமிழ் மக்களை அவர்கள் வெறும் பகடைக்காய்களாக பயன்படுத்துகின்றார்களே தவிர, தமிழ் மக்களின் பிரச்சினைகளின் அக்கறையுடன் செயற்படவில்லை என்பதையே வெளிப்படுத்துகின்றது.

பொதுவாக ஒரு அரசாங்கம் ஆட்சியமைத்து முதல் ஆறு மாதங்களிலோ அல்லது 1 வருடத்திலோ முக்கியமான பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைளை முன்னெடுக்க தவறுமாயின், அதற்கு பின்னரான காலப் பகுதியில் அவற்றை நிறைவேற்றுவதற்கு சாதகமான அரசியல் சூழல் இருக்காது என்பதை கடந்த கால அனுபவங்கள் எமக்கு கற்றுத் தந்திருக்கின்றன.

இவ்வாறான நிலையில், இரண்டு வருடங்களாகியும் காணிகளை விடுவிப்பதில் இந்த அரசாங்கம் ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

இவ்வாறான நிலையிலேயே போராட்டங்களை முன்னெடுத்து அரசாங்கத்திற்கு ஒரு அழுத்தத்தினை ஏற்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றமையை நாங்கள் புரிந்து கொள்கின்றோம்.
அதனடிப்படையிலேயே இவ்வாறான போராட்டங்களில் பங்குபற்றி எமது ஆதரவினையும் வெளிப்படுத்தி வருகின்றோம்.

தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்ற இவ்வாறான போராட்டங்கள் ஆளுந் தரப்பிற்கு ஒருவகையான அழுத்ததினை ஏற்படுத்தி வருகின்றது என்பது அண்மைய நாட்களாக அவர்கள் வெளிப்படுத்துகின்ற கருத்துக்களில் இருந்தும் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகள் மூலமும் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

காணிகள் விடுவிக்கப்படும் என்று அங்காங்கே கருத்துக்களை வெளிப்படுத்தி வருவதுடன், போராட்டங்களை வலுவிழக்கச் செய்யும் நோக்கோடு சில நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

குறிப்பாக, அண்மையில் பலாலிப் பகுதியில் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த எமது பிரதிநிதி உட்பட சிலருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருன்றன.

எம்மைப் பொறுத்த வரையில் இவ்வாறான அழுத்தங்கள் மூலம் மக்கள் நலன்சார்ந்த போராட்டங்களில் இருந்து எம்மை அப்புறப்படுத்த முடியாது.

பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும் யாருக்கும் வளைந்து கொடுக்காமல், எதற்கும் அஞ்சி சமரசம் செய்து கொள்ளாமல் தனது மக்கள் நலன்சார்ந்த நிலைப்பாட்டில் தொடர்ந்தும் பயணிக்கின்ற தலைவனின் வழியில் பயணிக்கின்ற நாங்கள் இவ்வாறான அழுத்தங்களினால் பின்வாங்க மாட்டோம்.

எம்மைப் பொறுத்தவரையில் தற்போதைய சூழலில் எமது மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டுமாயின், ஆளுந் தரப்பிற்கு அழுத்தங்களை ஏற்படுத்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அவ்வாறான போராட்டங்களுக்கு, எம்மிடையே இருக்கின்ற வேறுபாடுகளை கடந்து அனைத்து தரப்பினரும் வலுச் சேர்க்க வேண்டும். நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களுக்கு எமது ஆதரவு தொடர்;ந்தும் இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.’ என்று தெரிவித்தார்.

Related posts: