ஆண்டு இறுதிக்குள் எல் நினோ சக்திவாய்ந்ததாக மாறுவதற்கு 90 சதவீத வாய்ப்புள்ளது –  வளிமண்டலவியல் திணைக்களம்!…….

Tuesday, August 18th, 2026


நடப்பு ஆண்டில் நிலவும் ‘எல் நினோ’ காலநிலை மாற்றம் ஆண்டின் இறுதிக்குள் மிகவும் சக்திவாய்ந்ததாக மாறுவதற்கு 90 சதவீத வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

கடந்த 75 ஆண்டுகளில் பதிவான எல் நினோ நிகழ்வுகளை விட இது மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என கணிப்புகள் காட்டுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.

வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் வாழும் மக்களின் உடல் வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க உயர்வு அவதானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இடைக்கிடையே பெய்யும் மழை காரணமாக இந்த நிலைமை குறைவாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் சராசரியாக 37 சதவீதமாகக் குறைந்துள்ளதாக அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.

தற்போதைய நீர் இருப்பு சிறுபோக பருவம் வரைக்கும், எதிர்வரும் நவம்பர்-டிசம்பர் மழைக்காலம் வரைக்கும் போதுமானதாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக நீரியல் வள முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் எச்.என்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வறட்சியான காலநிலை நிலவிய போதிலும், நாடு முழுவதும் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 100 சதவீத கொள்ளளவில் இயங்கி வருவதாகவும், குடிநீர் விநியோகம் குறைக்கப்படவில்லை என்றும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார உறுதிப்படுத்தியுள்ளார்.

00

Related posts: