அதிக கட்டணம் – காலாவதியான மருந்துகள் – யாழில் 2 வைத்திய நிறுவனங்களுக்கு நீதிமன்றம் தண்டம்!
Wednesday, August 5th, 2026
……
காலாவதியான மருந்துகளை வைத்திருந்தமை மற்றும் இரத்தப் பரிசோதனைகளுக்கு அதிக கட்டணம் வசூலித்தமைக்காக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு வைத்திய நிறுவனங்களுக்கு, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் மொத்தம் 4,00,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் (CAA) சட்டத்தை மீறியமை தொடர்பாக, யாழ்ப்பாண மாவட்ட விசாரணை அதிகாரிகளால் கடந்த ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளைத் தொடர்ந்து, இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
அதனடிப்படையில் திருநெல்வேலி இருக்கும் வைத்தியசாலை ஒன்றில்
ஜூலை 29ஆம் திகதின்று மேற்கொள்ளப்பட்ட சோதனையில், காலாவதியான கண் அறுவை சிகிச்சை மருந்துகள், காலாவதியான ஈதர் திரவம், ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் காலாவதியான அறுவை சிகிச்சை உபகரணங்கள் கண்டறியப்பட்டன. மூன்று குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்ட இந்த நிறுவனத்துக்கு, ஒரு குற்றச்சாட்டுக்கு ஒரு இலட்சம் வீதம் மொத்தம் 3,00,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
அதேபோன்று நாவலர் வீதியிலுள்ள
மெடி கிளினிக் ஒன்றில்
ஜூலை 14ஆம் திகதின்று மேற்கொள்ளப்பட்ட சோதனையில், முழுமையான இரத்தப் பரிசோதனைக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணமான 400 ரூபாய்க்கு பதிலாக, 550 ரூபாய் வசூலித்தமை கண்டறியப்பட்டது.
இக்குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட அந்நிறுவனத்துக்கு 100,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்தத் தீர்ப்புகளின் விவரங்களை பத்திரிகைகளில் பிரசுரிக்குமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் அல்லது காலாவதியான மருந்துகள் மற்றும் உபகரணங்களை வைத்திருக்கும் வைத்தியசாலைகள், கிளினிக்குகள் அல்லது ஆய்வகங்கள் குறித்து 1977 என்ற துரித இலக்கத்துக்குத் தொடர்புகொண்டு முறைப்பாடு அளிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை, பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
000
Related posts:
|
|
|


