மண்டைதீவு படுகொலை வழக்கு செப்ரெம்பர் 22 வரை ஒத்திவைப்பு!
Tuesday, July 28th, 2026
மண்டைதீவு படுகொலை மற்றும் புதைகுழி தொடர்பான வழக்கு இன்று (28.07.2026) ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் மேலதிக சான்றுகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.
முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமான வழக்கு விசாரணை, நீடித்த வாதப் பிரதிவாதங்களை அடுத்து பிற்பகல் 2.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் பிற்பகல் மீளக் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில், வழக்காளிகள் சார்பில் சட்டத்தரணி செபமாலைமுத்து கிருஸ்ரபெலினாவுடன்
காணாமல் போனோர் அலுவலகத்தின் சட்டத்தரணி பூர்ணி மரியநாயகம், அதன் பிராந்திய இணைப்பாளர் த.செல்வக்குமார், வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர் அனுஷிய ஜெயகாந்த் ஆகியோர் இன்று குறித்த வழக்கு சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தனர்.
இதன்போது அடையாளம் காணப்பட்ட குறிப்பிட்ட இடத்திற்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், அக்காணியின் உரித்து யாருடையது என்பதை உறுதி செய்து அறிக்கை பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டது.
அத்துடன் கிராம சேவகர், பிரதேச செயலர், பிரதேச சபைத் தவிசாளர், வழக்கின் சார்பானவர்கள், சட்ட விசாரணை அதிகாரி, பொலிசார் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்களை உள்ளடக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்த ஆவன செய்யுமாறு மன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் சட்ட விசாரணை அதிகாரியின் அறிக்கை கிடைத்ததும், அகழ்வுப் பணிகளுக்கான நிதியைத் திரட்டுவதற்குத் துறைசார் அமைச்சினை நாடி நிதி பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்படுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிவான், வழக்கினை எதிர்வரும் செப்ரெம்பர் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
முன்பதாக கடந்த 2025 வருடம் செப்டம்பர் 04 ஆம் திகதியன்று, இச்சம்பவத்தில் தனது மகனைப் பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா மற்றும் வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோர் வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள் பலரை உள்ளடக்கி ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, குறித்த வழக்கு முதன்முதலில் கடந்த 17.09.2025 அன்று ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


