போலி பாதுகாப்பு ஸ்டிக்கரால் எட்டு மடங்கு மோசடி  – ஹர்ஷ டி சில்வா எச்சரிக்கை!

Monday, July 20th, 2026


…..
மதுபான போத்தல்களில் போலி பாதுகாப்பு ஸ்டிக்கர்களை ஒட்டும் மோசடி காரணமாக அரசாங்கத்துக்கு இழக்கப்படும் வரி வருவாயானது, சுவ செரிய (1990) சேவைக்காக அரசாங்கம் ஒரு வருடத்துக்கு செலவிடும் தொகையை விட எட்டு மடங்குக்கும் அதிகமானது என அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போதைய முறையின் கீழ், அச்சிடப்பட்ட ஸ்டிக்கர் ஒன்றுக்காக அரசாங்கம் செலவிடும் அதே அளவு தொகையை, டிஜிட்டல் ஸ்டிக்கர் ஒன்றுக்காகவும் செலவிட வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக ஒரு மதுபான போத்தலின் விலையில் பெரும்பகுதி அரசாங்கத்தின் வரிப் பணமாக சேர வேண்டும். எனினும், இந்த ஸ்டிக்கர் மோசடி காரணமாக அந்த முழுத் தொகையும் கடத்தல்காரர்களின் கைகளுக்கே செல்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், மதுவரித் திணைக்களத்தின் வரி வசூலிப்பு செயல்முறையை மேலும் முறைப்படுத்துவதற்காக, குறைந்தபட்சம் ஒரு கணினி அமைப்பைக்கூட (Computer System) நிறுவுவதற்கு அந்தத் திணைக்களம் தவறியுள்ளதாகவும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, ‘ஹிரு சி.ஐ.ஏ.’ குழுவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த மாதம் 28ஆம் திகதி மாலபே, சுதர்ஷன மாவத்தையில் உள்ள வீடு ஒன்றில் நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டது.

இதன்போது சுற்றிவளைப்பு அதிகாரிகளையே வியப்பில் ஆழ்த்தும் வகையில், மதுவரித் திணைக்களத்தினால் வெளியிடப்படும் பாதுகாப்பு ஸ்டிக்கர் வகையை ஒத்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட 18,000க்கும் அதிகமான மதுபான போத்தல்களும், பெருமளவிலான ஸ்டிக்கர் தொகுதியும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன.

இந்த பெரிய அளவிலான ஸ்டிக்கர் மோசடி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்ஷ டி சில்வா, குறித்த ஸ்டிக்கர்கள் மதுவரித் திணைக்கள அதிகாரிகளின் அனுமதியுடன் இரகசியமாக வெளியே கொண்டுவரப்பட்டவையா அல்லது வேறு ஏதேனும் தரப்பினரால் போலியாக அச்சிடப்பட்டவையா என்பது குறித்து உடனடியாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

000

Related posts: