நிலங்களை மீளப் பெற போராடி வரும் மயிலிட்டி மக்களுக்கு ஈ.பி.டி.பி தொடர்ந்தும் குரல் கொடுக்கும் – ஸ்ரீரங்கேஸ்வரன்!
Friday, July 17th, 2026
….
தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நம்பியே மக்கள் தற்போதைய அனுர அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினர்.
அதனடிப்படையில் யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்த நிலையிலும், 36 ஆண்டுகளாகத் தமது சொந்த நிலங்களை இழந்து வாடகை வீடுகளிலும் முகாம்களிலும் வாழும் வலிகாமம் வடக்கு மயிலிட்டி மக்களின் நிலங்களை அவர்களிடம் ஒப்படைக்க இன்றைய அரசாங்கம் தவறிவிட்டது என ஈ.பி.டி.பி கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.
வலி வடக்கு மயிலிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த ஜே/248, ஜே/251, ஜே/246 மற்றும் ஜே/255 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் தமது காணிகளை விடுவிக்க கோரி 13 ஆவது வாரமாக இன்றும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்ட நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும்.கூறுகையில் –
மஹிந்தவின் காலத்தில் இருந்து இன்றைய அனுர வரையாக, மாறி மாறி வந்த ஐந்து ஜனாதிபதிகளும், அவர்கள் சார் அரசாங்கங்களும் மக்களின் நிலங்களை முழுமையாக அவர்களிடம் மீளக் கையளிப்பதாகத் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகள் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.இது மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது.
கடந்த தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நம்பியே மக்கள் தற்போதைய அனுர அரசாங்கத்திற்கு பெருமளவு ஆதரவு வழங்கினர்.
தங்களின் பூர்வீக நிலங்கள் தங்களுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வரும் மக்களின் நிலங்களை, துரிதமாக அவர்களிடம் கையளிக்க வேண்டும்.
நிலங்களை மீளப் பெறுவதற்காக மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
அவர்களின் இந்தக் கோரிக்கை நியாயமானது. தற்போதைய பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள விடயங்களைக் கவனிக்கும் ஜனாதிபதி, மக்களின் நிலங்களை அவர்களிடம் கையளிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இந்த விடயத்தில் மக்களுடன் இணைந்து தமது கட்சியும் தொடர்ந்து குரல் கொடுக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.






000
Related posts:
|
|
|


