பொலிசாரின் செயல் மிலேச்சத்தனமானது – சிறு அரசியல் குழுவினரின் செயற்பாடுகளும் நிலைமைகளை மோசமாக்கியுள்ளன – வெடுக்குநாறி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, March 21st, 2024

வழிபாடுகளுக்கென சென்றவர்கள் மீது தாக்குதல்களை நடத்தியமையும், அவர்களை அங்கிருந்து வெளியேற்றிய முறையும், பூஜைகளை இடைநடுவில் நிறுத்தியமையும் மிக மோசமான மிலேச்சத் தன்மையையே காட்டி நிற்கின்றன என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மறுபக்கத்தில் அங்கு சென்றிருந்த சிறு அரசியல் குழுவினரின் செயற்பாடுகளும் நிலைமைகளை மோசமாக்கி இருக்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அவர்களுக்கு எதராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலும் நாட்டில் நிலவும் சில பிரச்சினைகள் தொடர்பிலும் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

நாட்டில் வாழுகின்ற இந்துக்களிடையே மட்டுமல்ல மத சுதந்திரத்தை மதிக்கின்ற அனைத்து மக்களிடையேயும் மனக் கசப்பினையும், விரக்தி நிலையினையும் ஏற்படுத்தி இருக்கின்ற விடயம். அதாவது, வவுனியா, நெடுங்கேணி, வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று இடம்பெற்றுள்ள சம்பவம்.

மகா சிவராத்திரி என்பது இந்து வருடத்தில் வரும் கிருஸ்ணபட்ச, தேய்ப்பிறை சதுர்தசி திதியில் இரவில் வழிபடுகின்ற சிவனுக்குரிய விரதமாகும்.

சிவராத்திரி என்பதற்கு ‘மங்களகரமான இரவு’, ‘இன்பம் தரும் இரவு’ எனப் பொருள்கள் உண்டு.  ஆனால், எமது மக்களுக்கு அமங்களமான இரவாகவும், துன்பம் தரும் இரவாகவும் இந்த வருட சிவராத்திரி அமைந்துவிட்டது.

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடுகளை மேற்கொள்வதற்கான அனுமதி இருக்கின்ற நிலையில், இரவில் வழிபாடுகளை மேற்கொள்ள முடியாதென பொலிஸார் அதனைத் தடுத்திருப்பதும், சப்பாத்துக் கால்களுடன் ஆலய வளவுக்குள் நுழைந்து, அங்கிருந்த பூஜைப் பொருட்களை அப்புறப்படுத்தியிருப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாத செயற்பாடுகளாகும்.

மேலும், வழிபாடுகளுக்கென சென்றவர்கள் மீது தாக்குதல்களை நடத்தியமையும், அவர்களை அங்கிருந்து வெளியேற்றிய முறையும், பூஜைகளை இடைநடுவில் நிறுத்தியமையும் மிக மோசமான மிலேச்சத் தன்மையையே காட்டி நிற்கின்றன.

இந்த சம்பவமானது மதங்களுக்கிடையிலான கசப்புத் தண்மையினை தோற்றுவிக்கின்ற அதேவேளை, தேசிய இன நல்லிணக்கத்திற்கும் பாதிப்பினை ஏற்படுத்தும் செயற்பாடாகும்.

ஒரு பக்கத்தில் பொலிஸாரின் செயற்பாடுகள் இவ்வாறிருக்க, அங்கு சென்றிருந்த சிறு அரசியல் குழுவினரின் செயற்பாடுகளும் நிலைமைகளை மோசமாக்கி இருக்கின்றன என்பதையும் நான் இங்கு தெரிவித்துக் கொள்ள வேண்டும்.

தங்களது சுயலாப அரசியலை எல்லா இடங்களிலும் பயன்படுத்த முடியும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற இத்தகைய அரசியல் குழுவினர், எமது மக்களை பகடைக் காய்களாகப் பயன்படுத்தி வருவதையே நோக்கமாகக் கொண்டவர்கள்.

தேர்தல் காலங்களின் போது பல பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, எமது மக்களை ஏமாற்றி, வாக்குகளை அபகரித்துக் கொண்ட இவர்கள், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வாய்ப்புகள் அற்ற நிலையில், மக்களை திசை திருப்புகின்ற வகையில், எமது மக்களைத் தூண்டிவிட்டு, குளிர்காயும் நிலைமைகளை உருவாக்குவதையே இலக்காகக் கொண்டு, செயற்பட்டு வருகின்றனர்.

எனவே, இவர்களிடம் எமது மக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அதேநேரம், மேற்படி வெடுக்குநாறி மலை சம்பவம் தொடர்பில் ஒரு குழுவினை அமைத்து, சுயாதீனமானதொரு விசாரணையை ஆரம்பிக்குமாறு கடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு முந்தைய அமைச்சரவைக் கூட்டத்தில் நான் கோரிக்கை விடுத்திருந்ததுடன், அதனை எழுத்து மூலமாகவும் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கையளித்துள்ளேன். இதற்கு  ஜனாதிபதி அவர்கள் சாதகமான முடிவினை எடுப்பார் எனவும் நம்புகின்றேன். அதுமட்டுமல்லாது நீதிமன்ற தீர்ப்பும் சாதகமானதாக அமைந்துள்ளது

000

Related posts:


மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சட்டவிரோதமானவை – டக்ளஸ் எம்.பி. குற்றச்சாட்ட...
நாம் மக்களுக்காக முன்னெடுத்திருந்த பெரும்பணிகளின் அறுவடைக் காலம் இது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
உருண்டோடிக்கொண்டிருக்கும் உருழைக்கிழங்குகளால் தமிழ் மக்களின் உரிமைகளை பெறமுடியாது – அமைச்சர் டக்ளஸ் ...