மதுபான உரிமம் வழங்கும் முறைமையினை திருத்தியமைக்க இலங்கை மதுவரித் திணைக்களம் தீர்மானம்!

Monday, October 30th, 2023

மதுபான உரிமம் வழங்கும் முறைமையினை திருத்தியமைக்க அல்லது மாற்றங்களை செய்வதற்கு இலங்கை மதுவரித் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

அத்துடன் மதுபான உரிமம் வழங்கும் முறையற்ற நடைமுறைக்கு இந்த திருத்தங்கள் மூலம் தீர்வு காணப்படும் எனவும் மதுபான உரிமங்களின் எண்ணிக்கையை கண்காணிக்கும் விதிகளும் இதில் உள்ளடங்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கான மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் தற்போதைய சட்டத் தடைகள் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புதிய திருத்தங்கள் மதுபான உரிமங்களை வழங்குவதில் கவனம் செலுத்தும் என்பதுடன், நாட்டின் சுற்றுலா வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் தடைகளை நீக்கும் என்றும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, நிலுவைத் தொகையினை செலுத்தாத நிலையில், போலி ஸ்டிக்கர்களை ஒட்டி மதுபான விற்பனையின் ஈடுபட்ட நிறுவனங்களின் உரிமம் இரத்து செய்யப்படும் என கடந்த மாதமளவில் மதுவரித் திணைக்களம் தெரிவித்திருந்தது.

இதன்படி, குறிப்பிட்ட தினத்திற்குள் வரி நிலுவைத் தொகையினை செலுத்த வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. மதுவரித் திணைக்களம் பொதுக் கணக்குகள் பற்றிய குழுவில் முன்னிலையான போதே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

உரிய வரிகள் குறிப்பிட்ட நேரத்தில் அறவிடப்படவில்லை என தொடர்ச்சியாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றனர். இதன்படி, மொத்த நிலுவைத் தொகையான 6.2 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 2.5 பில்லியன் ரூபாய் வரி நிலுவையாக கணக்கிடப்பட்டுள்ளதுடன், எஞ்சிய 3.8  தண்டப்பணம் அறவிடப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு

இவ்வாறு போலியான ஸ்டிக்கர்களுடன் கூடிய மதுபானப் போத்தல்கள் தொடர்பில் ஒரு நிறுவனத்திடம் ஏறத்தாழ 40 மில்லியன் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டிருப்பதாகவும் குறித்த திணைக்களம் அண்மையில் அறிவித்திருந்தது.

மதுபானப் போத்தல்களில் போலியான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் ஒவ்வொரு போத்தலில் இருந்தும் அரசாங்கத்துக்கு 2,900 ரூபா வரி இழப்பு ஏற்படுவதாக வழிவகைகள் பற்றிய குழுவில் அண்மையில் வெளிப்பட்டது.

இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கடந்த ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி குழு வழங்கிய பணிப்புரைக்கு அமைய மதுவரித் திணைக்களத்தினால் இந்த சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த விடயம் குறித்த தகவல்களை ஆராய்ந்த வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க,

தொடர்ந்தும் இதுபோன்ற போலியான ஸ்டிக்கர் மோசடிகளில் ஈடுபட்டால் மதுவரி சட்டத்தின் 27வது பிரிவின் கீழ் குறிப்பிட்ட மதுபான உற்பத்தி நிறுவனத்தின் அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்யுமாறும், போலியான பாதுகாப்பு ஸ்டிக்கர் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யுமாறும் பரிந்துரைத்தார்.

அத்துடன், போலியான பாதுகாப்பு ஸ்டிக்கர்களுடன் கூடிய மதுபானப் போத்தல்களை விற்பனை செய்யும் மதுபான விற்பனை நிலையங்களைக் கண்டறிந்து அவற்றின் அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்யுமாறும், மதுபானப் போத்தல்களில் உள்ள பாதுகாப்பு ஸ்டிக்கர்களின் உண்மைத் தன்மைய இலகுவில் கண்டறியக் கூடிய வகையில் QR தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கையடக்கத் தொலைபேசி செயலியை (MOBILE APP) அறிமுகப்படுத்துமாறும் மதுவரித் திணைக்களத்துக்கு, குழு பரிந்துரைத்தது.

இதற்கமைய, இந்த வருட இறுதிக்குள் பின்வரும் கூறுகளைக் கொண்ட தகவல் தொழில்நுட்ப செயலியொன்றை மதுவரித் திணைக்களம் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் இங்கு தீர்மானிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

கொழும்பு செல்லும் பார ஊர்திகளின் சாரதிகள், உதவியாளர்களுக்கு யாழ்ப்பாணத்தில் பி.சி.ஆர் பரிசோதனை - மாவ...
இலங்கையின் சுயாதீனதன்மை ஜெனிவாவில் ஒருபோதும் விட்டுக் கொடுக்கப்படாது - பிரதமர் மகிந்த ராஜபக்ச அறிவி...
சர்வதேச நாடுகளின் கொரோனா மரணங்கள் பட்டியலில் இலங்கை 13 ஆவது இடத்தில் – எச்சரிக்கையுடன் இருக்குமாறு ப...