வடகொரியாவின் மிரட்டல் தொடர்கிறது !

Tuesday, March 22nd, 2016

தென்கொரியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுத்து வரும் வடகொரியா, உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த நாட்டுக்கு எதிராக ஐ.நா. சபை மற்றும் அமெரிக்கா சமீபத்தில் பொருளாதார தடைகளை விதித்தது.

இதற்கு பதிலடியாகவும், அமெரிக்கா – தென்கொரியா நாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சியை கண்டித்தும் கடந்த 18ஆம் திகதி மேலும் 2 நடுத்தர ரக ஏவுகணைகளை வடகொரியா பரிசோதனை செய்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்தது.

இந்த நிலையில் அந்த நாடு நேற்றும் (21) 5 ஏவுகணைகளை பரிசோதித்தது. ஹாம்கங் நகருக்கு தெற்கு பகுதியில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள் கடலில் வீசி பரிசோதிக்கப்பட்டன. அவை அனைத்தும் கடலில் சுமார் 200 கி.மீ. தொலைவில் போய் விழுந்தன.

முன்னதாக, அணுகுண்டு மற்றும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணைகளை விரைவில் சோதிக்க இருப்பதாக வட கொரிய அதிபர் கிம் ஜாங்அன் கடந்த வாரம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. வடகொரியாவின் இந்த பிடிவாதத்தால் கொரிய தீபகற்பத்தில் உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: